Thursday 21 July 2011

சமச்சீர் கல்வி: ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு: தமிழக அரசின் மேல்முறையீடு நிராகரிப்பு

சமச்சீர் கல்வி தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடைவிதிக்க மறுத்த உச்சநீதிமன்றம், ஆகஸ்டு 2ம் தேதிக்குள் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் புத்தகங்களை வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பாக திங்கள்கிழமை அளித்த தீர்ப்பில், அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்தக் கல்வியாண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. மேலும் வரும் 22ம் தேதிக்குள் மாணவர் அனைவருக்கும் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.


சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டத்தில் இடம்பெற்றுள்ள பாடத் திட்டம் தரமற்றதாக உள்ளது. 

எனவே நடப்பாண்டில் பழைய பாடத் திட்டத்தைத் தொடர அனுமதிக்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனுத்தாக்கல் செய்திருந்தது.

தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டது.

இந்த வழக்கில் இறுதி விசாரணை ஜூலை 27ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவருக்கும் ஆகஸ்டு 2ம் தேதிக்குள் புத்தகங்களை வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

No comments:

Post a Comment