Thursday 21 July 2011

தாய்லாந்து - கம்போடியா எல்லையில் தாய்லாந்து ராணுவம் உடனடியாக வாபஸ் பெற வேண்டும்: சர்வதேச நீதிமன்றம்

தாய்லாந்து, கம்போடியா எல்லையில் சிவன் கோவிலைச் சுற்றி நிறுத்தப்பட்டுள்ள ராணுவத்தினரை வாபஸ் பெற போதிய அவகாசம் வேண்டும் என்று தாய்லாந்து பிரதமர் அபிசிட் வெஜ்ஜாஜிவா கூறியுள்ளார்.


தாய்லாந்து, கம்போடியா எல்லையில் 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவன் கோவில் உள்ளது. இக்கோவில் உலக புராதனச் சின்னமாக 2008ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து இக்கோவிலை தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள் உரிமை கொண்டாடின. கோவிலுக்குள் நுழைந்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த மூவரை கம்போடியா கைது செய்தது.

இதையடுத்து தாய்லாந்து 400க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை அனுப்பி கோவிலைச் சுற்றி பாதுகாப்புக்கு நிறுத்தியது. இதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே வெடிகுண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு நடந்ததில் 28 பேர் பலியானது தெற்காசியாவில் மிகுந்த பதட்டத்தை ஏற்படுத்தியது.

இப்பிரச்னை தொடர்பாக ஹேக்கில் உள்ள சர்வதேச கோர்ட்டை கம்போடியா நாடியது. விசாரணை மேற்கொண்ட சர்வதேச கோர்ட்,"இரு நாட்டு எல்லைகளிலும் இருந்து ராணுவத்தை வாபஸ் பெற வேண்டும்" என்று உத்தரவிட்டது.

இதுகுறித்து தாய்லாந்து பிரதமர் அபிசிட் வெஜ்ஜாஜிவா தலைநகர் பாங்காக்கில் அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்த உத்தரவு குறித்து புதிய அரசு தான் முடிவு செய்ய வேண்டும். கோர்ட் உத்தரவு எங்கள் நாட்டு இறையாண்மையை பாதிக்காது.

ஆனால் இந்த உத்தரவு குறித்து புதிய அரசுக்கு பரிமாற்றம் செய்யவும் எங்களுக்கு போதிய கால அவகாசம் தேவை. எல்லையில் முகாமிட்டிருக்கும் 40 ஆயிரம் ராணுவ வீரர்களை கம்போடியா வாபஸ் பெற வேண்டும். எங்களது வீரர்கள் குறைந்தளவில் மட்டுமே முகாமிட்டுள்ளனர்.

தாய்லாந்து நாட்டில் புதிய பிரதமராக பியூ தாய் கட்சி பதவியேற்கவில்லை. இக்கோவில் கம்போடியாவுக்கு சொந்தம் என்றும், அதைச் சுற்றியுள்ள நிலம் தாய்லாந்து நாட்டிற்கு சொந்தம் என்றும் 1962ம் ஆண்டில் சர்வதேச கோர்ட் தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment