Saturday 14 May 2011

வெற்றிலையின் மருத்துவ குணங்கள்


14 May 2011



மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலையானது பயன்பாட்டில் இருந்து வருகிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் தாவரங்களில் வெற்றிலையும் ஒன்றாகும்.



இந்தியாவில் மிதவெப்ப மற்றும் குளிர்ச்சியான பகுதிகளில் வெற்றிலை வளர்க்கப்படுகிறது. வங்காளம், ஒரிசா, தமிழ்நாடு மும்பை போன்ற இடங்களில் இதன் இலைக்காக பயிரிடப்படுகிறது.



வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம்.



கெடினின், சாவிகால், பைரோ கெடிசால், யூஜினால், எக்ஸ்ட்ராகால், ஆக்சாலிக் அமிலம் போன்ற பல வேதிப்பொருள் வெற்றிலையின் மருத்துவ குணங்களுக்கு அடிப்படையாக உள்ளது.



இலைகளும், வேர்களும் மருத்துவ பயன் உடையவை. இலைகளில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய் மூச்சுக்குழல் நோய்களுக்கு மருந்தாகிறது. இலையின் சாறு ஜீரணத்திற்கு உதவுகிறது. வேர்பகுதி பெண்களின் மலட்டுத்தன்மையை போக்குகிறது.



அரை டம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி,சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.



வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும்.



இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.



சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு 500 மிலி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு 150 மிலி ஆக குறையும் வரை கொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து வேளைக்கு 50 மிலி வீதம் மூன்று வேளை உணவுக்கு முன்பு சாப்பிடவும்.



அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் அத்தி இலை 1 கைப்பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும். முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ் சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்.




கெய்ரோவில் பலஸ்தீன் ஆதரவு பேரணி

egypt protest
கெய்ரோ:மேற்காசியா நாடுகளில் ஜும்ஆ தினத்தில் தொழுகைக்குப் பிறகு வலுப்பெரும் அரசுக்கு எதிரான பேரணிகளிலிருந்து வித்தியாசமான தினமாக அமைந்தது கெய்ரோவில் நேற்றைய வெள்ளிக்கிழமை. ஐக்கிய நல்லிணக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பலஸ்தீன் இயக்கங்களான ஹமாஸ் மற்றும் பத்ஹிற்கு கெய்ரோவின் விடுதலை சதுரங்கமான தஹ்ரீல் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் ஆதரவை பிரகடனப்படுத்தினர். நேற்று முன்தினம் வகுப்பு மோதல்கள் நடைப்பெற்ற பகுதிகளிலிருந்து இப்பேரணியில் கலந்துக்கொண்டவர்கள் மனிதநேயத்தின் முன்மாதிரிகளாக மாறினார்கள்.
பலஸ்தீன் சகோதர, சகோதரிகளை அடக்கி ஒடுக்கி கொடுமைக்கு ஆளாக்கும் மனித குல விரோதியான இஸ்ரேலின் சியோனிச கொள்கைகளுக்கு எதிரான முழக்கங்கள் முபாரக் எதிர்ப்பு போராட்டத்தின் சின்னமாக விளங்கிய தஹ்ரீர் சதுக்கத்தில் உச்சபட்ச குரலில் ஒலித்தன.
இஸ்ரேல் ஆக்கிரமிப்பிற்கு எதிராக அடுத்த வாரம் காஸ்ஸாவிற்கு பேரணியாக செல்ல தன்னார்வ தொண்டர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். பேரணியை ரத்து செய்ய வேண்டுமென எகிப்தின் உள்துறை அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். எகிப்து நாட்டு மக்கள் காஸ்ஸாவிற்கு பேரணியாக செல்ல உகந்த நேரமல்ல இது என ஹமாஸின் தலைவர் காலித் மிஷ்அல் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, நீதியை நிலைநாட்ட வேண்டுமெனக்கோரி தொலைக்காட்சி தலைமையகத்தின் முன்னால் காப்டிக் கிறிஸ்தவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

தமிழகம்:மக்களின் கோபத்தால் தி.மு.கவுக்கு ஓய்வு

karunanidhi
சென்னை:தமிழக சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலுக்கான முடிவுகள் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பலத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கருத்துக் கணிப்புகளையும் மீறி தி.மு.க மோசமான தோல்வியை இத்தேர்தலில் சந்தித்துள்ளது. தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் கூறியது போல் மக்கள் தி.மு.கவுக்கு ஓய்வு கொடுத்துள்ளனர்.
ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டம், இலவச ஆம்புலன்ஸ் திட்டம், இலவச, “காஸ்’ அடுப்பு, இலவச கான்கிரீட் வீடு திட்டம், பல்வேறு அரசு துறைகளில் ஐந்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு, சிறுபான்மையினருக்கு 3.5 சதவீதம் இடஒதுக்கீடு, தலைநகர் சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் மேம்பாலங்கள், சாலைப் பணிகள், குடிநீர் திட்டங்கள் என, பல்வேறு திட்டங்களை செயல்படுத்திய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் குடும்பத்தினர் நடத்திய ஏகபோக ஆதிக்கம், அடிக்கடி மின்வெட்டு, விலைவாசி உயர்வு, 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழல் ஆகியவற்றின் காரணமாக குப்புற கவிழ்ந்துவிட்டது.
இலவசங்களை அள்ளி வீசி, பணத்தை கொடுத்து வாக்குகளை வாங்குவதில் கவனம் செலுத்திய தி.மு.க அரசு மக்களின் முக்கிய வாழ்வாதார பிரச்சனைக்கு உரிய முடிவுகளை மேற்கொள்ளாததன் காரணமாக பலத்த அடியை இந்த சட்டமன்றத் தேர்தலில் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மின்வெட்டினால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டது. விவசாயம் பாதிக்கப்பட்டது. விஷம் போல ஏறிய விலைவாசியை கட்டுப்படுத்தவும் தன்னால் இயன்ற முயற்சிகளை கலைஞரின் அரசு செய்யவில்லை. இவையெல்லாம் தி.மு.கவின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டன.
மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அ.இ.அ.தி.மு.க கூட்டணி 204 தொகுதிகளில் வெற்றிப்பெற்றுள்ளது. தனிப்பட்ட ரீதியாக 150 தொகுதிகளை கைப்பற்றி சட்டசபையில் தனி மெஜாரிட்டியை பெற்றுள்ளது அ.இ.அ.தி.மு.க.
அ.இ.அ.தி.மு.க கூட்டணியில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க 28 தொகுதிகளில் வெற்றிப் பெற்றுள்ளது. அ.தி.மு.க கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 9 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 8 தொகுதிகளிலும், மனிதநேய மக்கள் கட்சி 2 தொகுதிகளிலும் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் புதிய தமிழகம் கட்சி தலா 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
தலா ஒரு தொகுதியில் போட்டியிட்ட கொங்கு இளைஞர் பேரவை, இந்திய குடியரசு கட்சி, பார்வார்டு ப்ளாக் ஆகிய கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளில் வெற்றிப்பெற்றுள்ளன. 234 தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க கூட்டணிக்கு 30 இடங்களே கிடைத்துள்ளன. தி.மு.க 23 தொகுதிகளிலும், காங்கிரஸ் 5 தொகுதிகளிலும், பா.ம.க 2 தொகுதிகளிலும் வென்றுள்ளன. 193 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை.
பெருவாரியான வாக்குகளை அளித்து தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அ.இ.அ.தி.மு.க-வும் ஏதோ புனிதமான கட்சியல்ல. மக்களுக்கு மாற்று வழி இல்லாததால் தங்களின் கோபதாபத்தை எதிர்கட்சியான அ.இ.அ.தி.மு.க-வுக்கு வாக்குகளால் அளித்து தீர்த்துக்கொண்டனர் என்றே சொல்லலாம். ஏனெனில் அ.இ.அ.தி.மு.க-வின் கடந்தகாலம் சர்வாதிகாரமும், பாசிச தொடர்பும்,ஊழலும், மக்கள் விரோத கொள்கைகளாலுமே நிறைந்துள்ளது.
எவ்வளவு தூரம் மக்களுக்கு நல்வாழ்வுத் திட்டங்களை நிறைவேற்றுவார், தற்போதைய மின்வெட்டு, விலைவாசி பிரச்சனைகளை சமாளிப்பார் என்பது போகபோகத்தான் தெரியும். மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகளை செல்வி.ஜெயலலிதா எடுக்காவிட்டால் வாக்களித்த பலனை தமிழக வாக்காளர்கள் வருகிற 5 ஆண்டுகள் அனுபவிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவர்.

மாற்று அரசியலுக்கான உதயத்திற்கு வழிகோலும் தேர்தல் முடிவுகள்:இ.அபூபக்கர்

abubacker
புதுடெல்லி:கேரள மாநிலத்தில் தேர்தல் முடிவுகள் மாற்று அரசியலுக்கான புதிய விடியலை சுட்டிக்காட்டுவதாக சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். வழக்கமான முறைக்கு மாற்றமாக நுண்ணிய பெரும்பான்மையை மட்டுமே காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு கேரள மக்கள் வழங்கியுள்ளனர்.
கேரளத்தை தவிர மேற்கு வங்காளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் ஆளுங்கட்சிக்கு எதிரான உணர்வுகளை மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால், வழக்கமான முறைக்கு மாற்றமான நிலைப்பாடு ஒன்றும் இத்தேர்தல்களில் பிரதிபலிக்கவில்லை. ஊழலில் மூழ்கிய ஆளுங்கட்சியை தோல்வியடைய செய்ய இக்காரியத்தில் எவ்வித வித்தியாசமும் இல்லாத எதிர்கட்சி கூட்டணியை வெற்றிப் பெறச்செய்யும் நிலைப்பாட்டைத்தான் இத்தேர்தலில் மக்கள் பின் தொடர்ந்துள்ளனர். இதற்கு காரணம் மக்களுக்கு முன்னால் வேறு வழிகள் இல்லாதது தான்.
மாற்று அரசியலின் அத்தியாவசிய தேவையை இத்தேர்தல் முடிவுகள் கட்டியங்கூறுகிறது. மேற்கு வங்காளத்தில் மக்கள் விரோத ஆட்சியை அகற்றுவதற்கான சந்தர்ப்பத்தை எதிர் நோக்கியிருந்ததன் விளைவே மம்தா பானர்ஜியின் வெற்றியாகும். எந்தவொரு கட்சியுடன் கூட்டணி சேராமல் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் சட்டமன்றத் தேர்தல்களில் தனித்தே போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐ வேட்பாளர்கள் வெகுசிறப்பான திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.
போட்டியிட்ட 101 தொகுதிகளில் குறிப்பிடத்தக்க வாக்குகளை பெற அவர்களால் முடிந்துள்ளது. சில இடங்களில் எஸ்.டி.பி.ஐ வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதாக மாறியுள்ளன. சட்டமன்றத் தேர்தல்களில் முதல் பரிசோதனை என்ற நிலையில் எஸ்.டி.பி.ஐ இது அளிக்கும் தன்னம்பிக்கை சிறியதல்ல. மாற்று அரசியலுக்கான முயற்சிகளை எஸ்.டி.பி.ஐ தொடரும். இவ்வாறு இ.அபூபக்கர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஸ்.டி.பி.ஐக்கு அதிகரித்த வாக்குகள் கேரள அரசியலில் நிர்ணாயகம்

sdpi
திருவனந்தபுரம்:இரு பெரும் முன்னணிகளான யு.டி.எஃப் என்றழைக்கப்படும் ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் எல்.டி.எஃப் என்றழைக்கப்படும் இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆகியவற்றிற்கு மத்தியில் தனித்து போட்டியிட்ட சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கட்சி பெற்ற வாக்குகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கண்ணூர், கோழிக்கோடு, திருச்சூர் மாவட்டங்களில் சில தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ பெற்ற வாக்குகள் தேர்தல் முடிவுகளின் கதியை மாற்றியுள்ளது. கொல்லம், இடுக்கி, வயநாடு, மலப்புரம் மாவட்டங்களின் பல தொகுதிகளில் புறக்கணிக்க முடியாத கட்சியாக எஸ்.டி.பி.ஐ மாறியுள்ளது.
கேரள மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி நூலிழை பெரும்பானமையைத்தான் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 72 தொகுதிகளைப் பெற்று ஆட்சியைப்பிடித்துள்ளது காங்கிரஸ் கூட்டணி. இடதுசாரி கூட்டணிக்கோ 68 இடங்கள் கிடைத்துள்ளன. ஆகையால் காங்கிரஸ் கூட்டணி வெற்றிப்பெற்ற ஒவ்வொரு தொகுதியுமே முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு எதிர்பாராத அதிர்ச்சி தோல்விகளைக் கொடுத்துவிட்டு இடதுசாரிகளின் மானம் காத்தது கோழிக்கோடு மாவட்டம். அம்மாவட்டத்திலுள்ள வடகரை சட்டமன்றத் தொகுதியில் எஸ்.டி.பி.ஐ பெற்ற வாக்குகள் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் சோசியலிஸ்ட் ஜனதா கட்சி சார்பாக போட்டியிட்ட எம்.கே.பிரேம்நாத்திற்கு வெற்றி உறுதி என எதிர்பார்க்கப்பட்ட வடகரை தொகுதியில் இடதுசாரி கூட்டணியை சார்ந்த ஜனதாதளம் கட்சியின் சி.கே.நாணு 847 வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்று வெற்றிப்பெற்றுள்ளார். ஆனால், எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் ஸலீம் அழியூர் பெற்ற வாக்குகளோ 3.488 ஆகும். காங்கிரஸ் கூட்டணியின் வெற்றிக்கு எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் பெற்ற வாக்குகள் தடையாக மாறியது குறிப்பிடத்தக்கது.
நம்பிக்கைக்குரிய தற்போதைய எம்.எல்.ஏவை களமிறக்கி சி.பி.எம் கடும் போட்டியை ஏற்படுத்திய கண்ணூர் மாவட்டத்தில் அழிக்கோடு சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள முஸ்லிம் லீக் வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பை பெற்றுத்தந்தது எஸ்.டி.பி.ஐ பெற்ற வாக்குகளாகும். முஸ்லிம் லீக் இளைஞர் பிரிவைச்சார்ந்த கே.எம்.ஷாஜி 483 வாக்குகள் வித்தியாசத்தில் இங்கு வெற்றிப்பெற்றார். ஆனால், எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் நவ்ஷாத் பெற்ற வாக்குகளோ 2,935 ஆகும். இத்தொகுதியில் எஸ்.டி.பி.ஐ பெற்ற வாக்குகள் இடதுசாரிகளின் வெற்றியை பாதித்தது.
திருச்சூர் மாவட்டம் மணலூர் சட்டமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் பேபி ஜானின் தோல்வியில் நிர்ணாயக பங்குவகித்தது எஸ்.டி.பி.ஐ ஆகும்.4 83 வாக்குகள் வித்தியாசத்தில் தான் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் வெற்றிப்பெற்றார். எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் பி.கே.உஸ்மான் பெற்ற 2,293 வாக்குகள் இத்தொகுதியில் காங்கிரஸின் வெற்றியை நிர்ணயித்துள்ளது.
கொல்லம் மாவட்டத்தில் கருநாகப்பள்ளி சட்டமன்றத் தொகுதியில் இரு முன்னணிகளுடன் தனித்துப் போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐ மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கூட்டணிகளுடன் ஊடகங்களால் உயர்த்திக்காட்டப்பட்ட பா.ஜ.கவை இத்தொகுதியில் போட்டியிட்ட தற்போதைய எஸ்.டி.பி.ஐ கேரள மாநிலத்தலைவரான நாஸருத்தீன் எழமரம் நான்காவது இடத்திற்கு தள்ளி 7,645 வாக்குகளை பெற்றுள்ளார்.
இடுக்கி மாவட்டம் தொடுபுழா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் பெற்ற வாக்குகள் கேரள அரசியலில் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இங்கு போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐயின் எம்.எ.நஜீப் 5,386 வாக்குகளைப் பெற்றுள்ளார். கோதமங்கலம், குன்னத்துநாடு, கண்ணூர், மட்டனூர், பூத்தார், நாதாபுரம், கொண்டோட்டி, நிலம்பூர், மலப்புரம், வேங்கரா, மங்கடா, வள்ளிகுன்னு, பொன்னானி, தானூர், தவனூர், பட்டாம்பி, மானந்தவாடி, சொர்ணூர், ஆற்றிங்கல், வாமனபுரம், சேலக்கரை, குருவாயூர் ஆகிய தொகுதிகளிலும் இரண்டரை வருடம் கூட பூர்த்தியாகாத எஸ்.டி.பி.ஐ குறிப்பிடத்தக்க வாக்குகளை பெற்றுள்ளது.
கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சித்தேர்தலில் கிடைத்த வாக்குகளை விட அதிக வாக்குகள் தனித்துப்போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐக்கு கிடைத்துள்ளதாக கட்சியின் தலைவர் தெரிவிக்கிறார். மேலும் அதிக ஆர்வத்துடன் மக்கள் பிரச்சனைகளில் கட்சி தலையிட இவ்வாக்குகள் உதவும்.