Monday 27 June 2011

முத்துப்பேட்டை அருகே பயங்கரம் : விவசாயி படுகொலை

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் உள்ள இடும்பாவனம் ஊராட்சி மேலவாடியக்காடு பகுதியை சேர்ந்தவர் சிவசுப்ரமணியன் (47). இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர். இவர்களது பக்கத்து வீட்டுக்காரர் பரமசிவம்(24). சிவசுப்ரமணியன்& பரமசிவத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று மாலை பரமசிவம் தனது பைக்கில் வந்துகொண்டிருந்தார். நண்பருடன் சிவசுப்பிரமணியன் வந்த பைக்கை வழிமறித்து பரமசிவம் தகராறு செய்தார். இதில் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.

பின்னர் இருவரும் வீட் டிற்கு சென்று விட்டனர். நடந்த சம்பவம் குறித்து சிவசுப்ரமணியன் தனது மகன்களிடம் தெரிவித்தார். ஆத்திரமடைந்த இருவரும் தந்தையுடன் சென்று பரமசிவத்திடம் தகராறு செய்தனர். திடீரென 3 பேரும் சேர்ந்து பரமசிவத்தை கட்டையால் தாக்கினர். பதிலுக்கு பரமசிவமும் சிவசுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி ஜெயசித்ராவையும் தாக்கினார். இதில் சிவசுப்பிரமணியன் மண்டை உடைந்தது. ஜெயசித்ரா படுகாயமடைந்தார்.

இவர்கள் இருவரும் மற்றும் பரமசிவமும் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதன்பின்னர் சிவசுப்ரமணியனும், ஜெயசித்ராவும் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பரமசிவம் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதி காலை சிவசுப்ரமணியன் இறந்தார். தகவலறிந்த முத்துப்பேட்டை டிஎஸ்பி கோபி, இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன், சப் இன்ஸ்பெக்டர் அருள்பிரியா ஆகியோர் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் இது குறித்து பரமசிவம் மீது முத்துப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment