Monday 27 June 2011

தர்மஸ்தலா கோயில் முன்பு சத்தியம் செய்தார் குமாரசாமி- வார்த்தை தவறினார் எதியூரப்பா

தர்மஸ்தலா கோயிலில் சத்தியம் செய்யப்போவதாக கூறிய எதியூரப்பா இன்று காலை அக்கோயிலுக்கு சென்று தரிசனம் மட்டும் செய்துவிட்டு திரும்பினார். ஆனால் குமாரசாமி தான் சவால் விட்டபடி தனது ஆதரவாளர்களுடன் மஞ்சுநாதா சாமி முன்பு நின்று சத்தியம் செய்தார்.


கர்நாடக முதல்வர் எதியூரப்பா ஆட்சிக்கு தொடர் தொந்தரவு கொடுத்து வருபவர் மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி. இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை சுமத்துவது வழக்கமாகி விட்டது. இந்நிலையில் குமாரசாமியை சமாதானப்படுத்த முதல்வர் எதியூரப்பா தூதுவர் ஒருவரை அனுப்பியதாக குமாரசாமி தெரிவித்தார்.

இதனால் கர்நாடக அரசியலில் சலசலப்பு ஏற்பட்டது. தான் யாரையும் அனுப்பவேயில்லை என்று சாதித்தார் எதியூரப்பா. இதையடுத்து எதியூரப்பா தர்மஸ்தலாவில் சத்தியம் செய்யுமாறு குமாரசாமியை கேட்க அவரும் சம்மதித்தார். இருவரும் தம் பக்க நியாயத்தை நிரூபிக்க தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாதா சாமி முன்பு சத்தியம் செய்ய ஒப்புக் கொண்டனர்.

ஆனால் பாஜக தலைமையும், மத குருக்களும் எதியூரப்பாவை அணுகி சத்தியம் செய்ய வேண்டாம். மஞ்சுநாதா சாமி மிகவும் சக்தி வாய்ந்தது, தேவையில்லாத பிரச்சினை ஏற்பட்டு விடும் என்று பயமுறுத்தவே, அவரும் பின்வாங்கினார்.

இந்த நிலையில் எதியூரப்பாவும், குமாரசாமியும் சொன்னபடி தர்மஸ்தலா கோவிலுக்கு வந்தனர். இன்று காலை எதியூரப்பா தர்மஸ்தலா கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு கிளம்பினார். சத்தியம் எல்லாம் அவர் செய்யவில்லை.

ஆனால் குமாரசாமி தான் கூறியவாறே இன்று 12 மணிக்கு தர்மஸ்தலா கோயிலி்ல் சத்தியம் செய்தார். குமாரசாமிக்கு ஆதரவாக 20-க்கும் மேற்பட்ட ஜனதாதள எம்.எல்.ஏ.க்கள் தர்மஸ்தலாவில் குவிந்திருந்தனர். அவர்கள் புடை சூழ தர்மஸ்தலா கோவிலுக்கு வந்த குமாரசாமி, சொன்னபடி மஞ்சுநாதா சாமி முன்பு சத்தியம் செய்தார்.

முன்னதாக குமாரசாமி கூறுகையில், மஞ்சுநாதா சுவாமி சத்தியம் வாய்ந்தவர். இந்த மாநிலத்திற்கு நன்மைகளை மட்டுமே பயப்பவர். நான் அவர் முன்பு எனது மனதில் உள்ளதைச் சொல்லப் போகிறேன். அதற்குப் பிறகு மஞ்சுநாத சுவாமி பார்த்துக் கொள்வார். எது சத்தியம், எது அசத்தியம் என்பதை அவர் அறிவார் என்றார்.

இரு தலைவர்களில் சொன்னதைச் செய்து காட்டி விட்டார் குமாரசாமி. ஆனால் கடைசி நேரத்தில் ஜகா வாங்கி மீண்டும் ஒரு சரிவைச் சந்தித்துள்ளார் எதியூரப்பா.

No comments:

Post a Comment