Tuesday 19 July 2011

பெனாசிர் பூட்டோவின் பாதுகாவலர் சுட்டுக் கொலை

பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் அமீர்ஷா(42). இவர் மரணம் அடைந்த பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் பாதுகாவலராக இருந்தார்.

இவர் கராச்சியில் தங்கியிருந்தார். நேற்று இவர் குலிஸ்தான் இ ஜாவ்கர் பகுதியில் உள்ள கம்ரான் சவ்ராங்கி என்ற இடத்தில் தனது காரில் சென்று கொண்டிருந்தார்.


அப்போது மர்ம நபர்கள் இவரை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்தனர். பின்னர் அவரது காரை நோக்கி சரமாரியாக சுட்டனர். அதில் அவர் படுகாயம் அடைந்தார்.

மேலும் உடன் பயணம் செய்த அவரது நண்பர் மைராஜ்காலித் ஜகிரானிக்கும் காயம் ஏற்பட்டது.

படுகாயம் அடைந்த அமீர்ஷாவை கராச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர் மைராஜ் காலித் ஜகிரானிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலைக்கான சம்பவம் தெரியவில்லை. எனவே விசாரணை நடைபெறுவதாக கராச்சி தலைமை போலிஸ் அதிகாரி சவுத்மிர்ஷா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே அமீர்ஷா சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் அறிந்ததும் பாகிஸ்தான் மக்கள் கட்சி தொண்டர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். இதைத் தொடர்ந்து கராச்சியில் பரப்பரப்பு ஏற்பட்டது .

கொல்லப்பட்ட அமீர்ஷா பாகிஸ்தான் மக்கள் கட்சியில் கடந்த 18 ஆண்டுகளாக தீவிரமாக பணியாற்றி வந்தார். தொடக்கத்தில் அக்கட்சியின் இளைஞரணியில் சேர்ந்தார்.

தேர்தலையொட்டி கடந்த 2007ம் ஆண்டு பெனாசிர் பூட்டோ லண்டனில் இருந்து பாகிஸ்தான் திரும்பிய போது அவரது பாதுகாவலர் ஆனார்.

No comments:

Post a Comment