Tuesday 28 June 2011

சிங்கூர் நில விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் டாடா அப்பீல்

டெல்லி: சிங்கூர் நிலத்தை விவசாயிகளுக்கு நிலத்தை திருப்பி அளிக்கும் மேற்குவங்க அரசின் முடிவுக்கு இடைக்காலத் தடைவிதிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் மறுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அப்பீல் செய்துள்ளது.



நீதிபதிகள் சதாசிவம், ஏ.கே.பட்நாயக் ஆகியோர் கொண்ட விடுமுறை கால பெஞ்ச் முன்பு டாடா மோட்டார்ஸ் இந்த விவகாரத்தை கொண்டுசென்றது. அந்த பெஞ்ச் விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்தி வைத்தது.

முன்னதாக மேற்குவங்க மாநிலம் சிங்கூரில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை விவசாயிகளுக்கு திருப்பி அளிப்பதை நிறுத்த வேண்டும் என்ற டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கோரிக்கையை கொல்கத்தா உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

முந்தைய கம்யூனிஸ்ட் ஆட்சியின்போது சிங்கூரில் கார் தொழிற்சாலை அமைப்பதற்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து போராட்டம் நடத்திய விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மீது மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே, கடும் எதிர்ப்பு காரணமாக தனது புதிய கார் தொழிற்சாலை திட்டத்தை குஜராத் மாநிலத்திற்கு டாடா நிறுவனம் மாற்றிக் கொண்டது. எனினும், சிங்கூரில் கையகப்படுத்தப்பட்ட நிலம், டாடா வசமே இருந்தது.

இந்நிலையில், மேற்குவங்கத்தின் புதிய முதல்வராக பதவியேற்ற மம்தா பானர்ஜி தனது தேர்தல் அறிக்கையில் கூறியபடி சிங்கூர் நிலத்தை அதன் உரிமையாளர்களிடமே திருப்பி அளிக்க உத்தரவிட்டார்.

இதனை கடுமையாக எதிர்த்த டாடா நிறுவனம் இப்போது சட்டப் போரை ஆரம்பித்துள்ளது.

No comments:

Post a Comment