Tuesday 28 June 2011

இ-சலான், நடமாடும் தானியங்கி சிக்னல்: ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

சென்னை:  (டிஎன்எஸ்) இன்று (ஜுன் 28) தமிழக முதல்வர் ஜெயலலிதா, சென்னை அண்ணா சாலை காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்படும் உடனடி அபராதங்களுக்கு மின்னணு ரசீது வழங்கும் திட்டத்தையும் , எளிதில் எடுத்துச் செல்லத்தக்க சூரிய சக்தியால் இயங்கும் போக்குவரத்து செல்லும் திசைகாட்டும் கருவி முறையினையும் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கையடக்கமான மின்னணு ரசீது வழங்கும் கருவி வழங்கும் திட்டம் 2 கோடியே 83 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படுகிறது. இக்கருவியின் மூலம் தொடர்ச்சியாக போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளையும், திருட்டு வாகனங்களையும் எளிதில் கண்டுபிடித்து விடலாம். இந்த கையடக்க மின்னணு கருவியில் வாகன எண்ணை பதிவு செய்து

மீறப்பட்ட போக்குவரத்து விதி, விதியை மீறிய இடம், அபராதத் தொகை, நேரம் மற்றும் தேதி ஆகிய அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படும். இக்கருவியிலேயே வாகன ஓட்டிகளின் கையொப்பம் பெற்றபின் வெளிவரும் ரசீதைக் கொடுத்து அபராதத் தொகை வசூலிக்கப்படும். அடுத்த கட்டமாக கிரிடிட் கார்டு மூலம் அபராதம் செலுத்தும் முறையும் அறிமுகப்படுத்தப்படும். இந்த கையடக்க மின்னணு கருவி சென்னை நகர போக்குவரத்து காவல் அதிகாரிகள் அனைவருக்கும் வழங்கப்படும். இந்த கருவியிலுள்ள தகவல்கள் அனைத்தும் சென்னை எழும்பூரில் உள்ள போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை சர்வரில் பதிவு செய்யப்பட்டு கணினி திரைகள் மூலம் போக்குவரத்து போலீசார் கண்காணித்து வருவார்கள்.

இந்த மின்னணு ரசீது வழங்கும் முறை திட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று மடிக்கணினி மூலம் தொடங்கி வைத்து, ஏழு போக்குவரத்துக் காவல் அலுவலர்களுக்கு மின்னணு ரசீது வழங்கும் கருவிகளை வழங்கினார்கள்.

எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய சூரியசக்தியால் இயங்கும் போக்குவரத்து செல்லும் 20 திசைகாட்டும் கருவிகள் 26 லட்சம் ரூபாய் செலவில் காவல்துறையை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ் வாங்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து செல்லும் திசைகாட்டும் கருவிகள் அமைக்கப்படாத இடங்களில் எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய சூரியசக்தியால் இயங்கும் போக்குவரத்து செல்லும் திசைகாட்டும் கருவிகள் பயன்படுத்தப்படும். இந்த சூரியசக்தியால் இயங்கும் போக்குவரத்து செல்லும் திசைகாட்டும் கருவி, மின்சாரம் இல்லாத பகுதிகளிலும், பாதுகாப்பு பணியின்போதும், அதிக வாகனங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படும் இடங்களிலும் பயன்படுத்தப்படவுள்ளது. இந்த எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய சூரியசக்தியால் இயங்கும் போக்குவரத்து செல்லும் திசைகாட்டும் கருவிகளை உபயோகப்படுத்துவதால் மின்சார இணைப்பு மற்றும் சாலையில் பள்ளம் தோண்டுவது தவிர்க்கப்படும். மேலும், சூரிய ஒளி இல்லை என்றாலும் மின்சாரம் மூலம் இதை பயன்படுத்தலாம்.

சூரிய சக்தியால் இயங்கும் எளிதில் எடுத்துச் செல்லத்தக்க இந்த போக்குவரத்து செல்லும் திசைகாட்டும் கருவி முறையினை தமிழக முதல்வர் ஜெ ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார்.

இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (டிஎன்எஸ்)

No comments:

Post a Comment