Saturday 25 June 2011

இலவச பசு, ஆடு வழங்கும் திட்டம்: முதல்வர் ஆய்வு

இலவச கறவை பசு -ஆடுகள் வழங்கும் திட்டம் குறித்து, தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்திய முதல்வர் ஜெயலலிதா  உடன் அமைச்சர்கள்

சென்னை, ஜூன் 24: இலவசமாக பசுக்கள், ஆடுகள் வழங்கும் திட்டம் குறித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார்.


உழவர் திருநாளாம் பொங்கல் திருநாளில் இந்தத் திட்டத்தைத் தொடங்க அவர் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற தனித் துறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத் துறை எனும் இத்துறைக்குத் தனி அமைச்சரும், செயலாளரும் உள்ளனர்.

தொடர் திட்டங்கள்: தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள திட்டங்கள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றும் பணியில் முதல்வர் ஜெயலலிதா தீவிரமாக ஈடுபட்டுள்ளார். தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு அதற்கான பயனாளிகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டத்துக்கும், இலவச லேப்-டாப் அளிக்கும் திட்டத்துக்கும் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தப் புள்ளிகள் ஜூலை 11-ம் தேதி திறக்கப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 15-ம் தேதி இந்தத் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்.

பசுக்கள், ஆடுகள் வழங்கும் திட்டம்: அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள மற்றொரு முக்கிய திட்டமாக இருப்பது, இலவசமாக கறவை மாடுகளும், நான்கு ஆடுகளும் அளிப்பதாகும். பால் உற்பத்தியை 2.5 மில்லியன் லிட்டரிலிருந்து 10 மில்லியன் லிட்டராக உயர்த்த 6 ஆயிரம் கிராமங்களில் 60 ஆயிரம் பசுக்கள் இலவசமாக வழங்கப்படும்.

வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள குடும்பங்களுக்கு இலவசமாக நான்கு ஆடுகள் வழங்கும் திட்டம் குறித்து, தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார் முதல்வர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ. செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, கருப்பசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோரும், தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி, முதல்வரின் செயலாளர்கள் ஷீலா ப்ரியா, ராம மோகன ராவ், வெங்கடரமணன், சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத் துறை செயலாளர் சிவதாஸ் மீனா, பால், மீன்வளம், கால்நடைத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

பொங்கலில் தொடங்க முடிவு? இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தை உழவர் திருநாளாம் பொங்கல் திருநாளில் தொடங்க முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்திருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன.

வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள மக்களின் கணக்கெடுப்பு உணவுப் பொருள் வழங்கல் துறையிடம் இல்லை. எனவே, உள்ளாட்சி, நகராட்சி நிர்வாகம் ஆகிய துறைகளிடமிருந்து விவரங்கள் பெறப்பட உள்ளன.

சாதிவாரிக் கணக்கெடுப்பு தமிழகத்தில் டிசம்பரில் நடத்த முடிவு செய்யப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது. இந்தக் கணக்கெடுப்புடன் வறுமைக் கோட்டுக் கீழ் உள்ளவர்களின் விவரமும் தொகுக்கப்படுகிறது. இந்தக் கணக்கெடுப்பை மையப்படுத்தி இலவசமாக ஆடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment