Saturday 2 July 2011

லெபனான் முன்னாள் பிரதமரின் படுகொலை விசாரணையில் நால்வருக்கு எதிராக கைதாணை ஐ.நா. வின் லெபனானுக்கான விசேட தீர்ப்பாயம்

லெபனான் முன்னாள் பிரதமர் ரபீக் ஹரிரியின் படுகொலை குறித்த விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஐ.நா. வின் லெபனானுக்கான விசேட நீதிமன்றம் நான்கு பேருக்கு எதிராக கைதாணை பிறப்பித்துள்ளது.
இதனை வரவேற்றுள்ள ஹரிரியின் மகன் சாட் ஹரிரி,இது லெபனானுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தருணமெனக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் செல்வாக்குமிக்க அரசியல் மற்றும் போராளி அமைப்பைக் கொண்ட ஹிஸ்புல்லாஹ்வின் சிரேஷ்ட உறுப்பினர்களின் பெயர்களே இதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் கைதாணையில் உள்ளடக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்கள் பகிரங்கமாக வெளிப்படுத்தப்படமாட்டாதெனத் தெரிவிக்கப்படுகிறது.
2005 இல் மத்திய பெய்ரூட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்பொன்றில் ரபீக் ஹரிரியும் மேலும் 22 பேரும் கொல்லப்பட்டனர்.

இது குறித்த விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஹேக்கிலுள்ள ஐ.நா. வின் லெபனானுக்கான விசேச  தீர்ப்பாயம் இதில் தொடர்புடையவர்களெனச் சந்தேகிக்கப்படும் நால்வருக்கு எதிராகக் கைதாணை பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், இத்தீர்ப்பாயத்தின் குற்றச்சாட்டுகளைத் தனது அரசாங்கம் பொறுப்புடனும் யதார்த்தமாகவும் கையாளுமெனத் தெரிவித்துள்ள லெபனான் பிரதமர் நஜீப் மிகாடி அனால் இவை குற்றச்சாட்டுகளே தவிர, தீர்ப்பு அல்லவெனவும் தெரிவித்துள்ளார்.

 அத்துடன் குற்றம் நிரூபிக்கப்படும்வரை அனைத்துச் சந்தேகநபர்களும் அப்பாவிகளே எனவும் அவர் தெரிவித்துள்ளார். இக்குற்றச்சாட்டினால் புதிய பிரதமர் நெருக்கடி நிலையை எதிர்கொண்டிருப்பதாகச் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, இது குறித்து ஹிஸ்புல்லாஹ் அதிகாரிகள் இக்குற்றச்சாட்டு அரசியல்மயமானதெனத் தெரிவித்துள்ளனர்.

இப்படுகொலையுடன் தமக்கு எவ்வித தொடர்புமில்லையென  மறுத்துள்ளனர் ஹிஸ்புல்லாஹ், இத்தீர்ப்பாயம் அமெரிக்கா,இஸ்ரேல் மற்றும் பிரான்ஸினது கூட்டுச் சதியெனவும் குற்றஞ்சாட்டி உள்ளது.

மேலும், இது தொடர்பில் ஹிஸ்புல்லாஹ் உறுப்பினர்களைக் கைதுசெய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் கைதுசெய்ய வருபவர்களின் கரங்கள் துண்டிக்கப்படுமென ஹிஸ்புல்லாஹ் தலைவர் ஹஸிஸ் நஸ்ரல்லாஹ் எச்சரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment