Saturday 2 July 2011

சிரியாவில் ராணுவம் துப்பாக்கிச் சூடு: 14 பேர் பலி

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் முதல் பொது மக்கள் போராடி வருகின்றனர்.

போராட்டத்தை ஒடுக்க ராணுவம் களம் இறக்கி விடப்பட்டுள்ளது. கலவரத்தில் இதுவரை 1350 பொது மக்களும், 350 ராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.


இதை தொடர்ந்து அரசியல் சட்டம் மறுசீரமைப்பு செய்யப்படும் என அதிபர் பஷார் அல் ஆசாத் அறிவித்துள்ளார். அதை பொது மக்கள் ஏற்கவில்லை. அவர் பதவியை விட்டு விலகியே தீர வேண்டும் என்ற முடிவில் தீவிரமாக உள்ளனர்.

எனவே நாளுக்கு நாள் போராட்டம் வலுத்து வருகிறது. இந்நிலையில் நேற்று சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் ஹமா, அலெப்போ, டெர் அல் ஷோர், அமவுதா, சுவெய்தா, அல் பாரா, வடாகியா உள்ளிட்ட நகரங்களில் நேற்று பேரணி நடத்தப்பட்டது.

பேரணியில் சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அதிபர் பஷாருக்கு எதிராக கோஷமிட்டனர். "பஷாரே நாட்டை விட்டு வெளியேறு, சிரியாவுக்கு சுதந்திரம் கொடு" என்பன போன்ற கோஷங்களை எழுப்பினார்கள்.

ஒரு கட்டத்தில் பேரணியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. வன்முறை சம்பவங்களும் நடந்தன. எனவே பேரணியை அடக்க ராணுவத்தினரும், போலிசாரும் தடியடி நடத்தினார்கள். கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். பின்னர் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அதில் 14 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். லிதுவேனியா சென்றுள்ள அவர்,"சிரியா ஜனநாயகத்தை எதிர் நோக்கியுள்ளது. அதற்கு தகுந்தபடி பஷார் அல் ஆசாத் நடந்து கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment