Tuesday 5 July 2011

பராக் ஒபாமா கொல்லப்பட்டதாக வெளியான செய்தியால் பரபரப்பு

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கொலை செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் பொக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியின் ட்விட்டர் செய்தி இணைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.




டுவிட்டர் இணையத்தளத்தில் பொக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியின்  'பொக்ஸ் நியூஸ் பொலிட்டிக்ஸ்' எனும் செய்தி இணைப்பிற்குள் சட்டவிரோதமாக ஊடுறுவிய குழுவொன்றே வதந்தியை செய்தியாக பரப்பியுள்ளது.

ஆனால் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மீது இத்தகைய எந்த தாக்குதலும் மேற்கொள்ளப்படவில்லை என்பதே உண்மையாகும்.

அமெரிக்காவின் அயோவா மாநிலத்தில் உணவு விடுதியொன்றில்வைத்து ஜனாதிபதி பராக் ஒபாமா சுட்டுக்கொல்லப்பட்டதாக மேற்படி ட்விட்டர் செய்தியில் தெரிவிக்கப்பட்டது.


இரு துப்பாக்கி குண்டுகள் அவரை தாக்கியதாகவும் கூறப்பட்டது.
இன்று ஜூலை 4 ஆம் திகதி அமெரிக்க தேசிய தினத்தை அமெரிக்கர்கள் கொண்டாடிக்கொண்டிருக்கும் நிலையில் வதந்தி பரப்பப்பட்டுள்ளது.

"பராக் ஒபாமா காலமானார். ஜனாதிபதி கொல்லப்பட்டார். மிகத் துயரமான ஜூலை 4 உண்மையில் ஜனாதிபதி பராக் ஒபாமா கொல்லப்பட்டார்" என அச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அச்செய்தி வெளியாகி சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின் 'புதிய ஜனாதிபதி ஜோ பிடெனுக்கு வாழ்த்து' தெரிவிக்கப்பட்டிருந்தது.

3 மணித்தியாலங்கள் வரை இச்செய்திகள் எதுவும் அந்த இணையத்தளத்தில் இருந்து  அகற்றப்படாமல் இருந்தன.

'ஸ்கிரிப்ட் கிடீஸ்' எனும் நபர் அல்லது குழுவினால் இந்த ஊடறுப்புக்குக்கு உரிமை கோரப்பட்டுள்ளது.

பொக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியின் செய்திகள் அமெரிக்காவில் அதிகம் பார்க்கப்படும் கேபிள் தொலைக்காட்சி  செய்திகளாக விளங்குகின்றன. சுமார்  2 கோடி பேர் இச்செய்தி ஒளிபரப்புகளை பார்வையிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment