Tuesday 5 July 2011

போலி என்கவுண்டர்:கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 15 லட்சம் வீதம் நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி:டெல்லி கன்னாட்ப்ளேஸில் போலி என்கவுண்டரில் கொலைச்செய்யப்பட்ட இரண்டு தொழிலதிபர்களின் குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் வீதம் நஷ்ட ஈடு வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.கொலைச்செய்யப்பட்டவர்களின் மனைவிகளுக்கும், பிள்ளைகளுக்கும் சமமாக நஷ்ட ஈட்டுத்தொகை வழங்க நீதிபதி எஸ்.முரளீதரன் உத்தரவிட்டார்.


போலி என்கவுண்டர் சம்பவம் நடந்து 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குற்றம் நடந்தது டெல்லி அரசின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதி என்றாலும் குற்றம் புரிந்த போலீசார் மத்திய அரசின் கீழ் செயல்பட்டுள்ளதால் மத்திய உள்துறை அமைச்சகம் நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொழிலதிபர்களான பிரதீப் கோயல், ஜகஜித் சிங் ஆகியோரை கடந்த 1997 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31-ஆம் தேதி டெல்லி துணை போலீஸ் கமிஷனராக பதவி வகித்த எஸ்.எஸ்.ராத்தியின் தலைமையிலான படையினர் போலி என்கவுண்டரில் அநியாயமாக சுட்டுக்கொன்றனர்.டெல்லி போலீஸில் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்டாக புகழ்பெற்றவர் துணை கமிஷனர் ராத்தி.

ஹரியானாவை சார்ந்த க்ரிமினல்கள்தான் கொலைச்செய்யப்பட்டனர் எனவும், போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் அவர்களை சுட்டுக்கொன்றதாக ராத்தியின் தலைமையிலான போலீஸ் கும்பல் கூறியது. கொல்லப்பட்டவர்களின் காரில் போலீசாரே துப்பாக்கிகளை வைத்துவிட்டு என்கவுண்டர் நடந்த சூழலை போலியாக உருவாக்கினர். ஆனால், கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் நடத்திய சட்டரீதியான போராட்டங்களின் இறுதியில் வழக்கு சி.பி.ஐ விசாரணைக்கு சென்றது. என்கவுண்டர் போலி என்பதை சி.பி.ஐ கண்டறிந்தது. ராத்தி உள்பட 10 போலீஸார் கைதுச்செய்யப்பட்டனர். இவர்களுக்கு கடந்த 2007 அக்டோபர் மாதம் நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

பதவி உயர்வு கிடைப்பதற்காக க்ரிமினல்கள் என குற்றம் சாட்டி அப்பாவிகளான தொழிலதிபர்களை ராத்தி தலைமையிலான போலீஸ் கும்பல் சுட்டுக்கொன்றதை சி.பி.ஐ கண்டறிந்தது.இத்துடன் மேலதிகாரிகளை ஏமாற்ற ராத்தி தவறான தகவல்களை அளித்ததாகவும் சி.பி.ஐ கண்டறிந்தது.மேற்கு டெல்லியிலிருந்து காரில் கன்னாட்ப்ளேஸிற்கு வந்த தொழிலதிபர்களை போலீஸ் பின்தொடர்ந்து சென்று துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது.

No comments:

Post a Comment