Wednesday 29 June 2011

தமிழகத்திற்கு புதிதாக 4 ரயில்கள்: தெற்கு ரயில்வே

சென்னை :  தமிழகத்தில் வரும் ஜுலை முதல் 4 புதிய ரயில்கள் அறிமுகம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


இது தொடர்பான அறிவிப்பு 2011 - 2012-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டின் போது, அப்போதைய மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்திருந்தார்.
கோவை - தூத்துக்குடி தினசரி இணைப்பு எக்ஸ்பிரஸ் ரயில்:

கோவை - தூத்துக்குடி - கோவை இடையே (ரயில் எண்: 16612/16611) இயங்கும் இந்த ரயில் ஜுலை 1 முதல் கோவையில் இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடிக்கு காலை 6.10 மணிக்கு வந்து சேரும். இதே போல் ஜூலை 2 முதல் தூத்துக்குடியில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு காலை 7.30 மணிக்கு கோவை செல்லும்.

திருப்பூர், ஈரோடு, புகழூர், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சிமணியாச்சி, மீளவிட்டான், தூட்டிமேலூர் ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.

இந்த ரயிலில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் நாளை (ஜுன் 30) முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த ரயில் கோவை - நாகர்கோவில் இடையே ஏற்கெனவே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இணைக்கப்பட்டிருக்கும். வாஞ்சி மணியாச்சியில் இருந்து இணைக்கப்பட்ட பெட்டிகள் தூத்துக்குடிக்கு பிரித்து அனுப்பப்படும்.
சென்னை சென்ட்ரல் - சாய்நகர் சீரடி வாராந்திர அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில்:

இந்த ரயில் (22601) சேவை சென்னை சென்ட்ரலில் இருந்து ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் காலை 10.10 மணிக்கு புறப்பட்டு, வியாழக்கிழமை காலை 11.30 மணிக்கு சாய்நகர் சீரடி சென்றடையும்.

இதே போல் மறுமார்க்கத்தில் இந்த ரயில் (22602) சாய்நகர் சீரடியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் காலை 8.25 மணிக்கு புறப்பட்டு, சனிக்கிழமை காலை 9.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும். அதன்படி இந்த ரயில் சேவை சென்னை சென்ட்ரலில் இருந்து ஜுலை 6-ம் தேதி முதலும், சாய்நகர் சீரடியில் இருந்து ஜுலை 8-ம் தேதி முதலும் இயங்கத் தொடங்கும். மேலும் இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை (ஜுன் 30) முதல் தொடங்கும்.

சென்னை சென்ட்ரல் - மைசூர் வாராந்திர அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில்:

இந்த ரயில் சேவை (22681) மைசூரில் இருந்து ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமை காலை 5.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும். இதே போல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இந்த ரயில் (22682) ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, வெள்ளிக்கிழமை காலை 8.35 மணிக்கு மைசூர் சென்றடையும்.

இந்த ரயில் சேவை மைசூரில் இருந்து ஜுலை 6 முதலும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஜுலை 7 முதல் இயங்கத் தொடங்கும். இதற்கான முன்பதிவும் நாளை (ஜுன் 30) முதல் தொடங்கும்.
கோவை - மேட்டுப்பாளையம் பயணிகள் ரயில்: கோவை - மேட்டுப்பாளையம் இடையே இந்த ரயில் ஏற்கெனவே சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஜூலை 1-ம் தேதி முதல் இந்த ரயில் சேவை ஞாயிறு தவிர மற்ற நாள்களில் இயங்கும்.

இந்த ரயில் (56146) கோவையில் காலை 9.30 மணிக்கு புறப்பட்டு மேட்டுப்பாளையத்துக்கு காலை 10.20 மணிக்கு செல்லும். மேட்டுப்பாளையத்தில் இருந்து (வண்டி எண்: 56147) காலை 10.40 மணிக்கு புறப்பட்டு காலை 11.30 மணிக்கு கோவை வந்தடையும். இதே போல் கோவையில் இருந்து (வண்டி எண்: 58148) பகல் 12 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.50 மணிக்கு மேட்டுப்பாளையம் செல்லும். மேட்டுப்பாளையத்தில் இருந்து (வண்டி எண்: 56149) மதியம் 1.10 மணிக்கு புறப்பட்டு மதியம் 2 மணிக்கு கோவை வந்தடையும்.

மேலும் கோவையில் இருந்து (வண்டி எண்: 56150) மதியம் 3 மணிக்கு புறப்பட்டு 3.50 மணிக்கு மேட்டுப்பாளையம் செல்லும். மேட்டுப்பாளையத்தில் இருந்து (வண்டி எண்: 56151) மாலை 4.20 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு மாலை 5.10-க்கு வந்தடையும்.

இந்த ரயில் கோவை வடக்கு, பெரியநாயக்கன்பாளையம், காரைமடை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

No comments:

Post a Comment