Friday 1 July 2011

ஃபேஸ்புக்கை ஒரு கை பார்க்க வரும் கூகுள் ப்ளஸ்!!

சமூக வலை தளங்கள் எனப்படும் ஃபேஸ் புக் மற்றும் ட்விட்டரின் வரவு ஜாம்பவான் இணைய தளங்களை அசைத்துப் பார்த்துவிட்டன.

இதன் விளைவு பெரிய நிறுவனங்களும் ஒரு சமூக வலைத் தளத்தை ஆரம்பிக்க வேண்டிய நெருக்கடிக்குள்ளாகியுள்ளன.




அந்த வகையில், தனக்கு பெரும் போட்டியாகத் திகழும் ஃபேஸ்புக்கை சமாளிக்க தானும் ஒரு சமூக வலைத்தளத்தை ஆரம்பிக்கிறது உலகின் நம்பர் ஒன் இணையதளமான கூகுள் நிறுவனம்.

இதற்கு கூகுள் ப்ளஸ் என பெயரிட்டுள்ளது.

இதுகுறித்து கூகுள் நிறுவன பொறியியல் பிரிவு மூத்த துணை தலைவர் குண்டோத்ரா தனது வலைப்பதிவில் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்:

சமூக இணையத்தளம் எனப்படும் சமூகவலை தளங்களில் மக்கள் பெரும் ஆர்வம் க‌ாட்டி வருகின்றனர்.

அவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதமாக சமூக இணையதளத்தை உருவாக்கும் முயற்சியில் கூகுள் நிறுவனம் ஈடுபட்டிருந்தது. தற்போது கூகுள் பிளஸ் என்ற பெயரில் புதிய ‌தொழில்நுட்பத்திலான சமூக இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

இந்த புதிய சமூக இணையத்தளம் பேஸ்புக் தளம் போன்றதுதான் என்றாலும், அதைவிட கூடுதல் வசதிகளை பெற்றுள்ளது. இந்த புதிய சேவையினை ஆண்ட்ராய்ட் ஆபரேடிங் சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் மொபைல் ஷாப்களிலும் பெற்றுக்கொள்ளலாம். இப்போது சோதனை ஓட்டமாக இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சர்க்கிள்ஸ், ஸ்பார்க்ஸ், ஹேங்அவுட்ஸ் மற்றும் மொபைல் உள்ளிட்ட ‌சிறப்பம்சங்களை உள்ளடக்கியது இந்த புதிய தளம். வரும் நாட்களில் இந்த தளம் வாடிக்கையாளர்களின் அபிமானத்துக்குரிய தளமாக மாறும் என நம்புகிறோம்."

-இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

முதல் கட்டமாக குறிப்பிட்ட பயனாளர்களுக்கு கூகுள் ப்ளஸ் அழைப்பு அனுப்பி வருகிறது.

இன்றைய தேதிக்கு பேஸ்புக்கிற்கு 600 மில்லியன் பயனாளர்கள் உள்ளனர். இத்தனை வலுவான பேஸ்புக்கை கூகுள் ப்ளஸ் ஒரு கை பார்க்குமா... பார்க்கலாம்!

No comments:

Post a Comment