Monday 25 July 2011

தி.மு.க. தலைவராக கருணாநிதியே நீடிப்பார்: பொதுக்குழுவில் முடிவு

தி.மு.க. பொதுக்குழு கூட்டம், கோவை சிங்காநல்லூரில் கட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் நேற்று கூடியது.

இதில், கருணாநிதி தலைமை தொடரும் என்று முடிவு செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக, தலைமைப் பதவி குறித்த சர்ச்சைக் கருத்துக்கள் தீவிரமாகப் பேசப்பட்ட நிலையில் முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலினுக்கு தலைமைப் பதவி கிடையாது என்று முடிவு செய்யப்பட்டது.


தி.மு.க. பொதுக்குழு கூட்டம், கட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் கோவை சிங்காநல்லூரில் நேற்று நடந்தது. சட்டசபைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பின் கூடும் பொதுக்குழு என்பதால், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்கள் உட்பட 3,000 பேர் பங்கேற்றனர்.

இரண்டு நாட்கள் நடைபெற்ற, தி.மு.க. பொதுக்குழுவில் பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்ட போதும், திராவிட இயக்கத்தை தொடர்ந்து நடத்த வேண்டிய பொறுப்பு கருணாநிதியிடம் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம், கட்சியில் வாரிசுப் போட்டிக்கு தற்காலிகமாக தீர்வு காணப்பட்டது.

கட்சித் தலைமைப் பதவி ஸ்டாலினுக்கா அல்லது அழகிரிக்கா என்ற பரபரப்பு முடிந்தது. கட்சித் தலைமைக்கு ஸ்டாலின் பெயர் அறிவிக்கப்படலாம் என்ற அவரது ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பும் பொய்த்து போனது.

நாடாளுமன்ற குழுக்கள், இந்திய தலைமை தணிக்கை அதிகாரி, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் குறிப்பிட்ட 1.76 லட்சம் கோடி ரூபாய் என்ற கருத்தியலான இழப்பு குறித்து தீர்மானத்தில் அதிக முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. தி.மு.க. எம்.பி. யான கனிமொழி கைது, சி.பி.ஐ. யின் பாரபட்ச செயல் என்று தீர்மானம் குறிப்பிடுகிறது.

அந்தத் தொலைக்காட்சி நிறுவனத்தில், கனிமொழி, 20 விழுக்காடு பங்குக்கு உரியவர் என்ற முறையில், அதை ஒரு குற்றமாக கற்பித்து, கனிமொழியும், நிர்வாக இயக்குனர் சரத்குமாரும் ஜாமினில் வருவதைக்கூட இந்திய புலனாய்வுத்துறை ( சி.பி.ஐ.) கடுமையாக ஆட்சேபித்து, இத்தனை நாட்கள் சிறையில் வைத்திருப்பது, இயற்கை நியதிக்கும், நியாயங்களுக்கும், இந்த வழக்கின் சூழ்நிலைகளுக்கும் புறம்பானது.

ஒருவரை குற்றவாளி என்று தீர்ப்பு வழங்காத வரை, அவரை தொடர்ந்து சிறையில் வைத்திருக்கக்கூடாது என்ற கருத்தை, மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தும், முன்னாள் சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லியும், பா.ஜ. மூத்த தலைவர்களான ஜஸ்வந்த் சிங், யஷ்வந்த் சின்கா ஆகியோரும் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஓ.பி.சைனி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறையிலேயே இருக்க வேண்டும் என்பது சி.பி.ஐ. எண்ணமா? என்று எச்சரிக்கையே விடுத்திருக்கிறார்.

எனவே, மத்திய புலனாய்வுக்குழு, கனிமொழி ஜாமினில் வெளிவருவதை தடை செய்யும் நடவடிக்கை, ஏதோ உள்நோக்கத்தோடு கூடிய ஒரு பாரபட்சமான நடவடிக்கை என்றே பொதுக்குழு கருதுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பிரச்சினைக்கு, விரைவில் நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்குமென்றும், பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதே சமயம் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தொடர்ந்து, தி.மு.க. இருக்குமா என்பது குறித்து குறிப்பு ஏதும் இல்லை.

மேலும் ராஜா, தயாநிதி ராஜினாமாவுக்குப் பதிலாக மத்திய அமைச்சரவையில் யார் இடம் பெறப் போகின்றனர் என்ற கேள்விக்கும் விடை தரவில்லை பொதுக்குழு.

தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில், கட்சியை வலுப்படுத்த ஏழு பேர் கொண்ட அமைப்பு முறை ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கட்சியை வலுப்படுத்தும் நோக்கத்துடன், எம்.பி. இளங்கோவன், பொன்.முத்துராமலிங்கம், ஜி.எம்.ஷா, பிச்சாண்டி, முகமது சகி, வி.பி.ராஜன், பாஸ்கர் சுந்தரம் ஆகிய ஏழு பேர் அடங்கிய கழக அமைப்பு முறை ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவினர் விவாதித்து, விரைவில் வழங்கவுள்ள புதிய சட்ட திட்ட வழிமுறைகளை அடுத்த பொதுக்குழுவில் ஒப்புதல் பெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கட்சியை வலுப்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதை அறிந்த தொண்டர்கள் பலர், அடிமட்ட தொண்டனின் குறைகளை கேட்டு, அதன்படி கொள்கைகள் வகுக்க வேண்டும். அதுவரை அறைக்குள் உட்கார்ந்தபடி எத்தனை குழுக்கள் அமைத்தாலும் பயனில்லை என ஆவேசத்துடன் தெரிவித்தனர்.

லோக்பால் மசோதா வரம்புக்குள் பிரதமரையும் உட்படுத்த வேண்டும் என தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம், மத்தியில் ஆளும் காங். கூட்டணிக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள முக்கிய தீர்மானமாகக் கருதப்படுகிறது.

தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில், மத்திய அரசு கொண்டுவரவுள்ள லோக்பால் மசோதாவில், இந்திய பிரதமரையும் உள்ளடக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமரைச் சேர்க்கக்கூடாது என்ற நிலையை காங். கட்சி எடுத்துள்ள நிலையில், கூட்டணியில் இருந்து கொண்டே, அதற்கு நேர் எதிரான நிலையை, தி.மு.க. எடுத்துள்ளது.

2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தி.மு.க.வுக்கு ஏற்பட்டுள்ள தர்ம சங்கடத்தை, காங்கிரஸ் கட்சி கண்டு கொள்ளாததே, பொதுக்குழு தீர்மானத்தின் பின்னணி என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment