Thursday 28 July 2011

தாமதமாகக் கிடைக்கும் நீதியும் அநீதிதான்!

நிலப்பறிப்பு : மாநிலத்தில் இம்மோசடி குறித்து, குவிந்துவரும் புகார்களை விசாரிக்க மாவட்டந்தோறும் காவல்துறையில் தனிப்பிரிவை, அரசு ஏற்படுத்தும் அளவுக்கு சூடுபிடித்துள்ள விவகாரம். 

இதுவரை, 2,400 புகார்கள் வந்துள்ளதாகத் தெரிகிறது. அதில் 196 புகார்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.அரசியல்வாதிகள் தொடங்கி, அதிகாரிகள், கிரிமினல்கள் வரை நீளும் புகார்கள் காவல்துறையினரையே மிரளவைத்துள்ளன. 


இந்த நடவடிக்கையை ஆளும் அரசின் பழிவாங்கும் போக்கு என ஒருதரப்பினர் குற்றஞ்சாட்டினாலும், குற்றச்சாட்டுக்கு ஆளாவோரின் பின்னணியைப் பார்த்தால், மோசடி நடந்திருக்க வாய்ப்பிருப்பதாகவே தோன்றுகிறது.இன்னும் சொல்லப்போனால், கடந்த ஆட்சியிலேயே அவர்கள் மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. ஆனால், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

சேலத்தில் ஒரு காலனியைச் சேர்ந்த மக்களே விரட்டப்பட்டு நிலம் அபகரிக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. இதில் ஒரு முன்னாள் அமைச்சரும் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.பெரும்பாலும் நிலப்பறிப்பு குறித்து, புகார் தர வருவோரைப் பார்த்தால் அவர்கள் எந்தப் பின்னணியும் இல்லாத சாதாரண குடிமக்கள்.

வாரிசுகளற்ற வயதான தம்பதியர், கணவரை இழந்த பெண்கள், ஏழை விவசாயிகள், ஓய்வுபெற்ற அலுவலர்கள், பணி நிமித்தமாக வெளியூர்களுக்கு இடமாறியவர்கள், வெளிநாடுகளில் குடிபெயர்ந்தவர்கள் தங்களது காலி மனை, நிலம், வீடு குண்டர்களாலும், அரசியல் தொடர்புடைய ரெüடிகளாலும் அநியாயமாக அபகரிக்கப்பட்டதாகப் புகார் தந்துள்ளனர்.

இதில் உரிமையாளர்களிடம் இடத்தின் மதிப்பைக் குறைத்துப் பேரம் பேசி மிரட்டி, அடிமாட்டு விலைக்கு வாங்கிய புகார்கள் தனி. பணிய மறுத்தவர்களைக் கொலை செய்த அராஜகங்களும் நடந்துள்ளன.நிலப்பறிப்பு புகார் தெரிவிக்கச் சென்ற அப்பாவிகளிடம், "வம்பை விலை கொடுத்து வாங்காம... பேசாம கொடுக்கறத வாங்கிட்டுப் போற வழியப் பாரு..!' என கிரிமினல்களுக்குச் சாதகமாக சில போலீஸாரே மனசாட்சியின்றி பஞ்சாயத்துப் பேசியுள்ள அவலங்களும், கடந்த காலங்களில் அரங்கேறியதாகக் கூறப்படுகிறது.

வட மாவட்டத்தில் நில மோசடி முறைகேட்டில் சிக்கி, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள ஒரு காவல்துறை ஆய்வாளர் எழுப்பியுள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள மாளிகையைப் பார்த்தால், அரண்மனையை மிஞ்சும் அளவுக்கு ஆடம்பரம் மிளிர்கிறது!சில ஆயிரம் ஊதியம் வாங்கிய இந்த அதிகாரியால் குறுகிய காலத்தில், எவ்வாறு இப்படி ஒரு பிரம்மாண்ட மாளிகையை எழுப்ப முடிந்தது?நம்மூரில் மட்டுமே, இதுபோன்ற ஊழல்கள் சாத்தியம். 

காவல்துறையில் இவர்களைப் போன்ற கறுப்பு ஆடுகளால்தான், நேர்மையாகச் செயல்படும் அதிகாரிகளும் களங்கத்தைச் சுமக்க நேரிடுகிறது.தென்மாவட்டங்களில் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களாலும், கிரானைட் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களாலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் குறுகிய காலத்தில் மிரட்டியோ, குறைந்த விலைக்கோ ஏகபோகமாக வளைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, தனிப்பிரிவு காவல்துறையினர் முறையான விசாரணையைத் தொடங்கினால், இன்னும் பல திமிங்கிலங்கள் வலையில் சிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதில், வேதனையான விஷயம் என்னவென்றால், அப்பாவிகளின் நிலம் பறிக்கப்பட்ட அராஜகத்துக்கு காவல்துறையினரும், அரசு அலுவலர்களும் உடந்தையாக இருந்ததுதான்.

இப்போது அவர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டிருந்தாலும், "பழைய மொந்தையில் புதிய கள்' ஆகத்தான், அவர்களது செயல்பாடு இருக்கும். நிலப்பறிப்பு புகார்களில் பாதிக்கப்பட்டோருக்கு, நீதிமன்றங்கள் மூலமாவது விரைந்து நீதி கிடைக்குமா எனப் பார்த்தால், அதிலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

இதை அறிய ஒரு சிறு சம்பவம்: ஒரு வயதான தம்பதியர், தங்களது வீட்டின் முன் உள்ள காலியிடத்தில் ஒருவரைக் கடை வைத்துக்கொள்ளச் சொல்லி வாடகைக்கு விடுகின்றனர்.அந்நபர், அரசியல் தொடர்புடைய மோசடிப் பேர்வழி என்பது அவர்களுக்குத் தெரியாது. விளைவு! நாளடைவில், அவர் சரியாக வாடகை கொடுக்காமல் தகராறு செய்யவே, அவர்கள் இடத்தைக் காலி செய்யச் சொல்கின்றனர். அவர் முடியாது என மறுத்துத் தகராறு செய்யவே, பிரச்னை கடைசியில் நீதிமன்றம் செல்கிறது. 

இப்போது அந்த விவகாரம், நீதிமன்றத்தில் தேங்கிக் கிடக்கும் பல்லாயிரம் வழக்குகளோடு வழக்காக வாய்தாக்களாகவும், விசாரணையாகவும் நீடித்துக் கொண்டிருக்கிறது. எங்கே தமது இடம் பறிபோய் விடுமோ என்ற கவலையில், அந்தத் தம்பதியரின் பரிதவிப்பை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. 

சாதாரண வாடகைப் பிரச்னைக்கே, பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த அளவுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என்றால், நிலப்பறிப்பில் சங்கிலித் தொடர்போல நீளும் மோசடிகளில் எத்தனை ஆயிரம் பேரின் நிம்மதி பறி போயிருக்கும்? நிலமோ.. மனையோ.. வீடோ இழந்து பரிதவித்து வருவோருக்கு அது வாழ்நாள் உழைப்பு. 

ஆனால், மோசடிப் பேர்வழிகளுக்கோ அதுவே பிழைப்பு. இதில், நடுநிலையாளர்கள் முன் உள்ள கேள்வி என்னவென்றால், நிலப்பறிப்பு குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள், அவர்கள் எத்தனை பெரிய பின்னணி உடையவர்களாயினும், கட்சி பேதமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்பதே. தாமதமாகக் கிடைக்கும் நீதியும் அநீதிதான்!

No comments:

Post a Comment