Thursday 28 July 2011

சுரங்க ஊழல் விவகாரத்தில் சிக்கிய எதியூரப்பா பதவி விலக பாஜக உத்தரவு- நாளை புதிய முதல்வர் தேர்வு

பெங்களூர் : கர்நாடக சுரங்க ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முதல்வர் எதியூரப்பா உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று பாஜக உத்தரவிட்டுள்ளது. அவருக்குப் பதிலாக புதிய முதல்வரை தேர்வு செய்ய, பாஜக எம்எல்ஏக்களின் கூட்டம் நாளை நடக்கிறது என்று அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் கூறினார்.

டெல்லியில் பாஜக தலைவர் நிதின் கட்காரி தலைமையில் நடந்த கட்சியின் நாடாளுமன்றக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய அவர்,

சுரங்க ஊழல் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எதியூரப்பாவை முதல்வர் பதவியிலிருந்து நீக்க பாஜக நாடாளுமன்றக் குழு ஒருமனதாக முடிவு செய்துள்ளது.

இதனால் எதியூரப்பா உடனடியாக பதவி விலக வேண்டும்.

அவருக்குப் பதிலாக புதிய முதல்வரை தேர்வு செய்ய நாளை பெங்களூரில் கர்நாடக பாஜக எம்எல்ஏக்களின் கூட்டம் நடக்கும். மூத்த தலைவர்களான அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங் ஆகியோர் முன்னிலையில் இக் கூட்டம் நடக்கும் என்றார்.

எதியூரப்பா பதவி விலக பாஜக 12 மணி நேர கெடு விதித்துள்ளது. அதற்குள் அவர் விலகாவிட்டால், அவர் பதவி நீக்கப்படுவார் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment