Wednesday 22 June 2011

நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கிரேக்கம், அயர்லாந்து, போர்ச்சுகலுக்கு உதவ நிதியம்: ஐரோப்பிய யூனியன் முடிவு

பெர்லின் : நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நாடுகளுக்கு உதவ 70 ஆயிரம் கோடி யூரோ நிதியம் ஏற்படுத்தும் திட்டத்துக்கு ஐரோப்பிய யூனியன் நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. இத் தொகைக்கென புதிய நிதியம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.



இஎஸ்எம் என்ற பெயரிலான இந்த நிதி உதவித் திட்டம் ஏற்கெனவே அமல்படுத்தவிருந்த 44,000 கோடி யூரோ நிதி உதவிக்கு மாற்றாக அமையும்.




ஐரோப்பிய நாடுகளின் ஸ்திர நிதியம் என்ற பெயரில் உருவாக்கப்படும் இந்த நிதியத்துக்குத் தேவைப்படும் தொகை 2013-ம் ஆண்டுக்குள் திரட்டப்பட்டுவிடும்.


ஓராண்டுக்கு முன்பு கிரேக்கத்தில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அயர்லாந்து, போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளும் நிதி நெடுக்கடிக்கு உள்ளாயின. ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் இந்த நாடுகள் எதிர்கொண்ட நிதி நெருக்கடியால் ஐரோப்பிய யூனியனில் உள்ள வளமான நாடுகளும் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவானது. ஐரோப்பிய நாடுகளிலும் பொருளாதார தேக்க நிலை உருவாகிவிடக்கூடாது என்பதற்காக ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகளின் நிதி அமைச்சர்கள் ஆலோசித்து முதல் கட்டமாக கிரேக்கத்துக்கு 10,000 கோடி யூரோக்களை அளிக்க ஒப்புக் கொண்டனர். ஐரோப்பிய யூனியனும், அன்னியச் செலாவணி நிதியமும் (ஐஎம்எஃப்) இணைந்து இந்தத் தொகையை கடந்த ஆண்டு மே மாதம் அளித்தன.


இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை லக்ஸம்பர்க்கில் நடைபெற்ற ஐரோப்பிய யூனியன் நாடுகளின் நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் அடுத்த கட்ட நிதி உதவி அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது 12,000 கோடி யூரோ தேவை என மதிப்பிடப்பட்டது. நிதியத்தில் மொத்தம் 44,000 கோடி யூரோக்கள் அளவுக்கு சேர்ந்துள்ள நிலையில் கிரேக்கத்துக்குத் தேவையான 12 ஆயிரம் கோடி யூரோக்களை அளிப்பதில் எவ்வித சிரமமும் இருக்காது என கூறப்படுகிறது. எஞ்சிய தொகையை அயர்லாந்து, போர்சுக்கலுக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டது.


மீட்பு நிதியத்தில் 620 கோடி யூரோ கடன் உத்தரவாதத்தின் பேரிலும் 80,000 கோடி யூரோ ரொக்கமாகவும் இருக்கும். இந்த நிதி 2013-ல் திரட்டப்பட்டு 2017-க்குள் அளிக்கப்பட்டு விடும்.


திரட்டப்படும் நிதித் தொகையில் அன்னியச் செலாவணி நிதியத்தின் பங்கு 25,000 கோடி யூரோவாக இருக்கும். ஐரோப்பிய பிராந்தியத்தில் ஸ்திரமான நிதி நிலை, பொருளாதார சூழல் நிலவுவதற்காக இந்த நிதியம் ஏற்படுத்தப்பட்டு உதவி அளிக்கப்படுவதாக 17 நாடுகளின் தலைவர் ஜீன் கிளாட் ஜுன்கர் தெரிவித்தார்.


முதல் முறையாக இந்த நிதியத்தில் வங்கிகள், முதலீட்டு நிறுவனங்கள், தனியார் காப்பீட்டு நிறுவனம் உள்ளிட்டவை பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் ஜெர்மனி தன் பங்காக 16,800 கோடி யூரோவை அளிக்கும். இதில் 2,200 கோடி யூரோக்கள் ரொக்கமாக இருக்கும்.







No comments:

Post a Comment