Wednesday 22 June 2011

தோல்வியில் முடிந்தது லோக்பால் கூட்டம்: ஹசாரே போராட்ட அறிவிப்பு

புது தில்லி, ஜூன் 21: முக்கியப் பிரச்னைகளில் ஒருமித்த கருத்து எட்டப்படாமல் செவ்வாய்க்கிழமை தில்லியில் நடந்த லோக்பால் வரைவுக் குழுவின் கடைசிக் கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது. இதனால், சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே குழுவினர் அதிருப்தியடைந்திருக்கின்றனர்.



அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், நீதிபதிகள் ஆகியோர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் தன்னிச்சையான உயர் அதிகாரங்களைக் கொண்ட லோக்பால் அமைப்பை உருவாக்குவதற்கான சட்ட முன்வடிவை தயாரிப்பதற்காக 5 அமைச்சர்கள், 5 சமூக ஆர்வலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

லோக்பால் விசாரணை வளையத்துக்குள் பிரதமரைக் கொண்டுவருவது உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகளில் அரசுத் தரப்புக்கும் அண்ணா ஹசாரே தலைமையிலான குழுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நீடித்து வந்தது.


இந்த நிலையில் இந்த வரைவுக் குழுவின் ஒன்பதாவது மற்றும் கடைசிக் கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடந்தது. வரைவுக் குழுவின் 10 உறுப்பினர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஒரு மணி நேரம் நீடித்த இந்தக் கூட்டத்தில் 8 முக்கியப் பிரச்னைகளில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என்று கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் அரசு தரப்பிலான அதிகாரப்பூர்வமான வரைவு மசோதா வெளியிடப்பட்டது. லோக்பால் மசோதாவின் விசாரணை வரம்பிலிருந்து பிரதமருக்கு விலக்கு அளிக்கப்படும் வகையில் மசோதா தயாரிக்கப்பட்டிருப்பதாக அண்ணா ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.


பிரதமர் மற்றும் உயர்நிலை நீதிபதிகளை விசாரணை வரம்புக்குள் கொண்டு வருவது, நாடாளுமன்றத்துக்குள் எம்.பி.க்களுக்கு நடத்தை விதிகளை வகுப்பது, லோக்பால் அமைப்புக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்வது, அவர்களை நீக்கும் நடைமுறையை வகுப்பது ஆகியவற்றில் இரு தரப்பினருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகத் தெரிகிறது.


இது தொடர்பாக அமைச்சர் கபில்சிபல் கூறுகையில், "அவர்கள் அவர்களது வரைவு மசோதாவைக் கொடுத்தார்கள். நாங்கள் எங்களது மசோதாவைக் கொடுத்தோம். இரண்டின் மீதும் குறுகிய விவாதம் நடந்தது. 6 முக்கியப் பிரச்னைகளில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. மேலும் இரு பிரச்னைகள் தீர்வு காணப்படாமல் இருக்கின்றன' என்றார்.


அரசு தரப்பில் தரப்பட்டிருக்கும் மசோதா தொடர்பாக ஹசாரே குழுவினர் கருத்துத் தெரிவிக்க இன்னும் இரண்டு மூன்று நாள்கள் அவகாசம் இருக்கின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.


ஹசாரே குழு அதிருப்தி:

இதனிடையே, அரசு அளித்திருக்கும் வரைவு மசோதா குறித்து ஹசாரே குழுவினர் கடும் அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர். லோக்பால் அமைப்பின் உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் குழுவில் ஆளும் கட்சியைச் சேர்ந்த 7 பேர் இருக்கும் வகையில் அரசின் மசோதா உருவாக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார் பிரசாந்த் பூஷண்.


இதற்கு முந்தைய வரைவிலாவது, பிரதமரை விசாரணை வரம்புக்குள் கொண்டு வருவதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால் இப்போதைய வரைவில் அதுவும் இல்லை என்று அரவிந்த் கேஜரிவால் குறைகூறியிருக்கிறார்.


அரசுக்குப் பாடம் புகட்டுவோம் - ஹசாரே: லோக்பால் வரைவுக் குழுவின் கடைசிக் கூட்டம் தோல்வியில் முடிந்திருப்பதால் திட்டமிட்டபடி, "அரசுக்குப் பாடம் புகட்டும் வகையில்' ஆகஸ்ட் 16-ம் தேதி ஊழலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கப் போவதாக அண்ணா ஹசாரே அறிவித்திருக்கிறார்.

No comments:

Post a Comment