Saturday 11 June 2011

நோயுற்ற கைதியை விடுவிக்க செஞ்சிலுவைச் சங்கத்திடம் கோரிக்கை


கடுமையாக நோய்வாய்ப்பட்டிருக்கும் தன் மகனை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறையில் இருந்து விடுவித்துத் தருமாறு கோரி, தமூன் பிரதேசத்தைச் சேர்ந்த அப்துல் ஸாலிம் பனீ உதேஹின் தாயார் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் மனு ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார்.
தன்னுடைய மகனின் உடல்நிலை நாளுக்கு நாள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் அவரது உயிருக்கு ஆபத்து நேருமாயின், அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்காத இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைநிர்வாகமே அதனைப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் தன்னுடைய மனுவில் அப் பெண்மணி தெரிவித்துள்ளார்.
ஷத்தா ஆக்கிரமிப்புச் சிறையில் இருந்த பனீ உதேஹின் உடல்நிலை மிகக் கடுமையாகச் சீர்குலைந்ததை அடுத்து, அவர் அஃபோலா ஆக்கிரமிப்புச் சிறைக்கு மாற்றப்பட்டார். இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறை மருத்துவர்களால் அவருக்கு ஏற்பட்டுள்ள நோய் என்ன என்பது இன்னுமே கண்டுபிடிக்கப்படாத நிலையில், நாளுக்கு நாள் அவரது நிலை மோசமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
திடகாத்திரமான இளைஞனாய் இருந்த பனீ உதேஹ், சுமார் 9 வருடங்களுக்கு முன் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையால் கைதுசெய்யப்பட்டு, 30 வருடகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். அவரது உடல்நலம் ஆக்கிரமிப்புச் சிறைச்சாலையில் தொடர்ந்த கடும் சித்திரவதைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டது. தற்போது உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் அவரை உடனடியாக ஆக்கிரமிப்புச் சிறையில் இருந்து விடுவித்து, உரிய சிகிச்சைகளைப் பெற்றுக் கொடுக்கும் முயற்சியில் அவரது வயோதிகத் தாய் தொடர்ந்து போராடி வருகின்றார்.

No comments:

Post a Comment