Tuesday 21 June 2011

15 ஆண்டில் இல்லாத அதிகம்

உலகம் முழுவதும் 4.37 கோடி அகதிகள்

Muthupet PFI -- 21/June/2011
உலகம் முழுவதும் 4.37 கோடி பேர் அகதிகளாக வாழ்ந்து வருவதாக ஐ.நா.வின் துணை அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அவர்களில் 80 சதவீதத்தினர் வளரும் நாடுகளை சேர்ந்தவர்கள்.


ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான தூதரக அலுவலகம் யு.என்.எச்.சி.ஆர். அதன் சார்பில் கடந்த ஆண்டு இறுதி வரை உலகம் முழுவதும் அகதிகள் எண்ணிக்கை பற்றி ஆய்வு நடந்தது. அதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியதாவது:



வெளிநாடுகளில் இருந்து மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்து அகதிகளாக உலகம் முழுவதும் கடந்த ஆண்டு இறுதி வரை 4.37 கோடி பேர் வாழ்ந்து வருகின்றனர். இது கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அதிகம். உள்நாட்டு கலவரம், இயற்கை சீற்றங்களால் இடம்பெயர்ந்தவர்கள் இவர்கள். இந்த அகதிகளில் பாதிக்கு மேற்பட்டோர் குழந்தைகள். அரபு நாடுகள் சிலவற்றில் இப்போது எழுந்துள்ள கலவரங்களால் இடம்பெயர்ந்தவர்கள் இந்த கணக்கெடுப்பில் இடம்பெறவில்லை.

மொத்த அகதிகளில் 2.75 கோடி பேர் உள்நாட்டு கலவரத்தால் பாதிக்கப்பட்டு சொந்த நாட்டிலேயே இடம்பெயர்ந்து வாழ்பவர்கள். 8.4 லட்சம் பேர் அகதிகளாக அங்கீகாரம் கேட்டு வெளிநாடுகளில் காத்திருப்பவர்கள். பல்வேறு பிரச்னைகளால் அகதிகளாக அறிவிக்கப்பட்டவர்கள் மீண்டும் தங்கள் பழைய இடத்துக்கு திரும்புவது கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவு இப்போது குறைந்துள்ளது.

அகதிகள் எண்ணிக்கையில் ஆப்கானிஸ்தான் முதலிடம் வகிக்கிறது. உலகின் மொத்த அகதிகளில் அங்கு 30 சதவீதத்தினர் உள்ளனர். 17 லட்சம் எண்ணிக்கையுடன் ஈராக் 2வது இடத்தில் உள்ளது. ஆப்ரிக்க நாடுகளில் 12 லட்சம் பேர் அகதிகளாக உள்ளனர். மொத்த அகதிகளில் 80 சதவீதம் பேர் ஏழை மற்றும் வளரும் நாடுகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment