Friday 2 September 2011

லிபியாவில் வெளியுறவுத் துறை அமைச்சர் சிறைபிடிப்பு




    
திரிபோலியின் தென்கிழக்கில் உள்ள பானி வாலித் நகரில் கடாபி ஒளிந்திருப்பதாக எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சரண் அடையத் தயாராக இருப்பதாக கடாபியின் ஒரு மகனான சாடி அல் கடாபி தெரிவித்துள்ளார். ஆனால் சாகும் வரை போராடப் போவதாக மற்றொரு மகன் சயீப் அல் இஸ்லாம் கூறியுள்ளார்.


இதற்கிடையில் கடாபியின் அரசில் வெளியுறவு அமைச்சராக இருந்தவரை எதிர்ப்பாளர்கள் நேற்று சிறை பிடித்தனர்.

கடந்த 1969 செப்டம்பர் 1ம் தேதி  27 வயதான மும்மர் கடாபி தலைமையிலான சிறு ராணுவ வீரர்கள் குழு புரட்சி மூலம் லிபியாவின் ஆட்சியைக் கைப்பற்றியது.

அதன் நினைவு நாளான நேற்று திரிபோலியின் தென்கிழக்கில் 153 கி.மீ தூரத்தில் உள்ள பானி வாலித் என்ற நகரில் கடாபி, அவரது மகன் சயீப் அல் இஸ்லாம் மற்றும் உளவுத் துறைத் தலைவர் அப்துல்லா அல் சனாஸ்ஸி ஆகியோருடன் ஒளிந்திருப்பதாக திரிபோலி ராணுவ கட்டுப்பாட்டு அறைகளின் அமைப்பாளர் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

அதே போல் இடைக்கால கவுன்சில் செய்தித் தொடர்பாளர் அப்துல் ஹபீஸ் கோகா கூறுகையில்,"சிர்ட் நகரில் உள்ள கடாபி ஆதரவாளர்கள் சனிக்கிழமைக்குள் சரண் அடைய வேண்டும் என்ற கெடு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக" தெரிவித்தார்.

இதற்கிடையில் கடாபி அரசில் வெளியுறவு அமைச்சராக இருந்த அப்துல் அடி அல் ஒபைடியை சிறை பிடித்துள்ளதாக எதிர்ப்பாளர்கள் கூறியுள்ளனர்.

அல்ஜீரிய அரசிடம் கடாபி அடைக்கலம் கேட்டதாகவும், ஆனால் அந்நாட்டு அதிபர் அதற்கு மறுத்ததாகவும் அல்ஜீரியப் பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் இதுகுறித்து கூறுகையில்,"கடாபி அல்ஜீரியாவில் இல்லை" என மறுப்பு தெரிவித்தார்.

இந்நிலையில் கடாபி மகன் சயீப் அல் இஸ்லாம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில்,"நாங்கள் சாகும் வரை போராடுவோம்" என்று கூறியுள்ளார்.

அதே தினத்தில் கடாபியின் மற்றொரு மகனான சாடி அல் கடாபி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திரிபோலியில் ரத்தம் சிந்துவது நிறுத்தப்பட வேண்டும். நான் சரண் அடையத் தயாராக உள்ளேன். அதற்காக எதிர்ப்பாளர்களுடன் நான் பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராக உள்ளேன். ஆனால் அவர்கள் தான் தொடர்ந்து மறுத்து வருகின்றனர் என்று கூறியுள்ளார்.

அதே நேரம் கடாபி ஆதரவாளர்கள் குவிந்துள்ள சிர்ட், தென்பகுதியில் உள்ள சபா, திரிபோலியின் தென்கிழக்கில் உள்ள பானி வாலித் ஆகிய மூன்று நகரங்களையும் எதிர்ப்பாளர்கள் நெருங்கிவிட்டனர்.

லிபியாவில் உள்ள இடைக்கால அரசுக்கு ரஷ்யா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. லிபியாவில் ஜனநாயக அரசு ஏற்படுவது குறித்தும், அங்கு நிவாரணப் பணிகள் மேற்கொள்வது குறித்தும் அந்நாட்டுப் பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்தும் பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி தலைமையில் நேற்று பிரான்ஸ் தலைநகர் பாரிசில் சீனா, ரஷ்யா உள்ளிட்ட 60 நாடுகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது.

இதில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரியும் கலந்து கொண்டார்.

No comments:

Post a Comment