Wednesday 13 July 2011

சவுதி அரேபியா : இந்திய தூதருக்கு அந்நாட்டு மன்னர் விருது

ரியாத் : சவூதி அரேபிய நாட்டிற்க்கான இந்திய தூதருக்கு அந்நாட்டின் உயரிய கவுர விருது நேற்று (ஜுலை 12) வழங்கப்பட்டுள்ளது.

இந்திய-சவூதி அரேபிய நாடுகளிடையே நல்லுறவு ஏற்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டி வந்த அந்நாட்டிற்கான இந்திய தூதர் தல்மிஸ் அகமதுவுக்கு , சவூதி மன்னரின் உயரிய விருதும், சான்றிதழும் நேற்று வழங்கப்பட்டன.

இதற்காக தலைநகர் ரியாத் நகரில் நடந்த விழாவில், சவூதி மன்னர் அப்துல்லாவின் கையெழுத்திடப்பட்ட சான்றிதழ் மற்றும் கேடயமும், அந்நாட்டு வெளியுறவு அமைச்சரும் சவூதி இளவரசருமான அல்-பைசால் வழங்கி கவுரவித்தார்.

கடந்த 2006-ம் ஆண்டு இந்தியா வந்தார் சவூதி மன்னர் அப்துல்லா. அப்போது இந்திய- சவூதி இடையே இருதரப்பிலும் பரஸ்பரம் நல்லுறவு வலுப்பெறும் வகையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர் கடந்த ஆண்டு இந்திய பிரதமர் மன்மோகன்சிங், சவூதி சென்றார். அப்போதும் இரு நாடுகளிடையே உறவு வலுப்பெறும் வகையிலான பேச்சுவார்த்தைகள் நடந்தன.

இதன் பின்னணியில் இந்திய தூதர் தல்மிஸ் அகமது சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விருதினை பெற்ற தல்மிஸ் அகமது கூறுகையில், மன்னரின் கவுர விருது பெறுவது பெருமையாக உள்ளது. சவூதியின் வளர்ச்சியில் ஏராளமான இந்தியர்களின் பங்கும் குறிப்பிடத்தக்கது. இங்கு 20 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் உள்ளனர். அவர்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்கு இந்த அரசு நல்ல ஒத்துழைப்பு கொடுக்கும் என நம்புகிறேன் . இவ்வாறு அவர் கூறினார்.

சவூதி நாட்டின் தூதராக தல்மிஸ் அகமது கடந்த 2000-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

No comments:

Post a Comment