Saturday 23 July 2011

அரசு அதிகாரிகளின் வீடுகளில் லோக் ஆயுக்த போலீசார் அதிரடி சோதனை: ரூ.10 கோடி தங்கம், ரொக்கம் பறிமுதல்

பெங்களூர் : கர்நாடக மாநிலத்தில் அரசு அதிகாரிகளின் வீடு, அலுவலகங்களில் லோக் ஆயுக்த போலீசார் அதிரடி சோதனை நடத்தி ரூ.10 கோடி தங்க நகை, ரொக்கம், ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர்.  


இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக லோக் ஆயுக்த நடத்திய சோதனையில் பொதுப்பணித்துறைச் செயலாளர் மிருத்தஞ்ஜெயா வீடு மற்றும் அலுவலகத்தில் ரூ.55 லட்சம் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக லோக் ஆயுக்த நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தெரிவித்தார்.  

பெங்களூர், பீதர், கொப்பள், பாகல்கோட்டை, தார்வாட், தாவணகெரே, கோலார் மற்றும் மங்களூர் உள்ளிட்ட 9 இடங்களில் வெள்ளிக்கிழமை காலை இச் சோதனை நடத்தப்பட்டது.  

இதில் பொதுப்பணித்துறைச் செயலாளர் மிருத்தஞ்ஜெயா வீடு மற்றும் அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ.6 கோடி மதிப்பிலான 2 மாளிகை, 2 வர்த்தகக் கட்டடங்கள் உள்ளிட்ட பல்வேறு சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  

பெல்தங்கடி வனச்சரக அதிகாரி ராகவ பிள்ளை வீட்டில் ரூ.88 லட்சம் மதிப்பிலான 370 கிராம் தங்க நகைகள், 2 வணிக வளாகங்கள் மற்றும் பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  தாவணகெரே பொதுப்பணித்துறைச் செயற்பொறியாளர் விருபாக்ஷப்பா வீட்டில் ஒன்றரை கிலோ தங்க நகைகள், 1 கிலோ வெள்ளி நகைகள், ரோக்கம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.89.09 லட்சம். 

 ஹூனகுந்தை சேர்ந்த மாவட்டப் பஞ்சாயத்து உதவி செயற்பொறியாளர் சுரேஷ் நிங்கப்பாகெüடரின் வீட்டில் 485 கிராம் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளிப் பொருள்கள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  

பீதர் குழந்தை நலத் திட்ட அதிகாரி பசவராஜ் வராவட்டி வீட்டில் 265 கிராம் தங்க நகைகள் மற்றும் பல்வேறு சொத்துகளின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  

கோலார் முல்பாகல் பஞ்சாயத்துராஜ் துறை பொறியியல் பிரிவு உதவி செயற்பொறியாளர் கோபால் வீட்டில் ரூ.72 லட்சம் மதிப்புள்ள ஆவணங்களும் 469 கிராம் தங்க நகைகளும், தும்கூர் ஏபிஎம்சி முதல் பிரிவு கணக்காளர் மயிலாரையா வீட்டில் 535 கிராம் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளிப் பொருள்கள் உள்பட ரூ.53 லட்சம் மதிப்புள்ள சொத்துகளும், ராய்ச்சூர் தொட்டசுகூர் கிராமப் பஞ்சாயத்து செயலாளர் அப்துல்கனி வீடு மற்றும் அலுவலகத்தில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள நகைகள், ரொக்கப்பணம், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment