Thursday 4 August 2011

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தொகுதி நிதி ரூ.2கோடியாக அறிவிப்பு!

தமிழக சட்ட சபை தொகுதி உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தொகுதி நிதி ரூ.2 கோடியாக உயர்த்தப்படுவதாக
தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், இன்று சட்டசபையில் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசுகையில் இத்தகவலை வெளியிட்டார்.


மேலும் அவர் விடுத்த அறிவிப்பு திட்டங்கள்

- இரண்டாம் நிலை நகரங்களில் ஏற்கெனவே உருவாக்கப்பட்ட மிகப் பெரிய கட்டமைப்புகளை முழு அளவில் பயன்படுத்தும் பொருட்டு காலியாக உள்ள இடங்களைத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். கணினி வன்பொருள் துறையில் முதலீட்டினை ஈர்க்கும் பொருட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

- இந்த அரசானது புதிய தகவல் பரிமாற்ற தொழில் நுட்பக் கொள்கை 2011-ஐ உருவாக்கும். இக்கொள்கையானது மென் பொருள், வன் பொருள் தொழில்களை ஊக்குவிக்கும் விதமாகவும், முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையிலும் அமையும்.

- உலக வங்கியின் நிதி உதவியுடன் தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக 2,500 கி.மீ. நீளமுள்ள நெடுஞ்சாலைகளை 5,000 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தும் பணியை இந்த அரசு மேற்கொள்ளும்.

2011-2012-ம் ஆண்டில் ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 257 கோடி ரூபாய் செலவில் தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் வழியாக கன்னியாகுமரி வரை செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையின் மீதமுள்ள 113 கி.மீ. நீள சாலை விரிவுபடுத்தப்பட்டு மேம்படுத்தப்படும்.

- தெற்காசியாவின் பெரிய தொழில் மையமாக சென்னை திகழ்கிறது. வேகமாக உயர்ந்து வரும் மக்கள் தொகை, வாகன நெரிசல் ஆகியவற்றை சமாளிக்க முதற்கட்ட வெளிவட்டச் சாலைப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

- நெமிலிச்சேரியையும் மீஞ்சூரையும் இணைக்கும் இரண்டாம் கட்ட வெளி வட்டச்சாலை அமைக்கும் பணி ஜப்பானிய பன்னாட்டு கூட்டுறவு நிறுவனத்தின் உதவியுடன் 1,075 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.

- சிறுசேரியிலிருந்து மாமல்லபுரத்தை இணைக்கும் 25 கி.மீ. நீளமுள்ள ராஜீவ்காந்தி சாலையில் இரண்டாம் கட்டப்பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவுற்றவுடன் 550 கோடி ரூபாய் செலவில் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

- சாலையின் தரத்தைச் சீராகப் பராமரிப்பதற்கு தொழில்நுட்பத்தை முறையாக பயன்படுத்துவது இன்றியமையாததாகும். இந்த ஆண்டில் கணினிவழி சாலை பராமரிப்பு முறை, சாலையின் தரம், புவியியல் தொடர்பான தகவல்களை உள்ளடக்கிய தகவல் தொகுப்பு ஆகியவற்றை உபயோகித்து சாலை மேலாண்மையும், திட்டமிடும் பணிகளும் மேற் கொள்ளப்படும்.

- மாநில நெடுஞ்சாலைகளையும், மாவட்டப் பெருஞ்சாலைகளையும் செயல்பாட்டின் அடிப்படையில் சாலைப் பராமரிப்பு ஒப்பந்த முறை மூலம் மேம்படுத்தி பராமரிக்கும் பணிகளை அரசு - தனியார் கூட்டு முயற்சியில் இந்த அரசு செயல்படுத்தும்.

No comments:

Post a Comment