Thursday 23 June 2011

மக்கள் மீது நேட்டோ தாக்குதல்: ஐ.நா தனி விசாரணை கோருகிறார் கடாபி

Muthupet PFI -- 23/June/2011
லிபியாவில் கர்னல் மோமர் கடாபி ராணுவத்தை ஒடுக்க நேட்டோ படைகள் முகாமிட்டு உள்ளன. இந்த பன்னாட்டு படைகள் தாக்குதலில் பொது மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகுகிறார்கள்.

தலைநகர் திரிபோலியில் நேட்டோ சமீபத்தில் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பெரும் சேதம் அடைந்ததுடன் உயிர் சேதமும் ஏற்பட்டது.

கடாபிக்கு எதிராக போராட்டம் நடத்தும் நபர்கள் மீதும் நேட்டோ குண்டுகள் பாய்ந்துள்ளன. இது தவறுதலாக நடந்த நிகழ்வு என நேட்டோ ஒப்புக் கொண்டு உள்ளது.

இந்த நிலையில் சர்மான் நகரில் நேட்டோ படைகள் திங்கட்கிழமை நடத்திய புதிய தாக்குதலில் பொதுமக்கள் வசிக்கும் 5 வீடுகள் நொறுங்கின. இந்த சர்மான் நகரம் திரிபோலிக்கு மேற்கே அமைந்துள்ளது.

சர்மான் நகரில் பன்னாட்டுப்படை தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். இதில் 3 குழந்தைகளும் இறந்துள்ளன என லிபிய அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இதுகுறித்து நேட்டோ தரப்பு கூறுகையில்,"தங்களது தாக்குதலில் தவறுதலாக பொது மக்கள் உயிரிழப்பு ஏற்படுவது வருந்தத்தக்கது" என கூறியுள்ளது.

மக்கள் உயிரிழப்புகளை தடுக்க நீண்ட நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம் என்றும் நேட்டோ உறுதி அளித்து உள்ளது. லிபியா மக்களுக்கு எதிரான வன்முறையை கட்டுப்படுத்துவதே நேட்டோவின் நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் குறித்து கடாபி கூறியதாவது: நேட்டோ படைகள் பொதுமக்கள் மீது நடத்தும் தாக்குதல் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் தனி விசாரணையை மேற்கொள்ள வேண்டும். நாங்கள் முஸ்லீம்கள். அதனால் நீங்கள் வெறுக்கிறீர்கள். எங்கள் மக்கள் மீது குண்டு மழை பொழிகிறீர்கள் என்றும் கடாபி கோபமாக கூறினார்.

தான் வசிக்கும் பகுதி மக்கள் குடியிருப்பு பகுதியாகும். ராணுவ பகுதியில் வசிக்கவில்லை. ராணுவ தளங்களை மட்டும் தாக்குவதாக கூறிக்கொள்ளும் நேட்டோ படைகள் திரிபோலியின் குடியிருப்பில் தாக்குதலை நடத்துகிறது என்றும் கடாபி ஆத்திரப்பட்டார்.

No comments:

Post a Comment