Thursday 23 June 2011

3 மாதங்களுக்குள் அரசு கேபிள் டி.வி.: முதல்வர் உறுதி

சென்னை, ஜூன் 22: தமிழகத்தில் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை மூன்று மாதங்களுக்குள் கொண்டு வர முதல்வர் ஜெயலலிதா உறுதி அளித்துள்ளதாகத் தெரிகிறது.


உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாகவே கேபிள் டி.வி. நிறுவனம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.




"ஆட்சிக்கு வந்தால் அரசு கேபிள் டி.வி. திட்டம் அமல்படுத்தப்படும்' என அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து ஆட்சிக்கு வந்ததும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒருபகுதியாக, சென்னையைத் தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களைச் சேர்ந்த கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை சந்தித்துப் பேசினர்.

இந்தச் சந்திப்பின் போது கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்ததாகத் தெரிகிறது. சேனல்களை டிஜிட்டல்மயமாக்க வேண்டும், சென்னை நகரில் இருப்பது போன்று அனைத்து மாவட்டங்களிலும் சேனல்களை இலவசமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முதல்வர் ஜெயலலிதாவிடம் முன்வைத்துள்ளனர்.

மூன்று மாதங்களில் வருகிறது: கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுடன் முதல்வர் ஜெயலலிதா அரை மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்பின் போது, ஆபரேட்டர்கள் ஒவ்வொருவரின் கருத்தையும் அவர் நன்கு கேட்டறிந்தார்.

அப்போது, உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் அரசு கேபிள் டி.வி.யைத் தொடங்க வேண்டும் என ஆபரேட்டர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலளித்த முதல்வர், "உள்ளாட்சித் தேர்தல் நடைபெற மூன்று மாதங்கள் ஆகும். அதுவரை ஏன் பொறுத்திருக்க வேண்டும். உடனடியாகவே அதைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்' என்று உறுதி அளித்துள்ளார். இந்த உறுதியைக் கேட்ட ஆபரேட்டர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
செயல்பட வைக்கத் தீவிரம்: தமிழகத்தில் தஞ்சாவூர், கோவை, வேலூர், நெல்லை ஆகிய இடங்களில் அரசு கேபிள் டி.வி.யை செயல்படுத்துவதற்கான கட்டுப்பாட்டு அறைகள் உள்ளன. இந்த கட்டுப்பாட்டு அறைகள் இயங்காத நிலையில் இருக்கின்றன. அவற்றைச் செயல்பட வைத்தாலே அரசு கேபிள் டி.வி.யை தொடங்குவதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment