Monday 4 July 2011

“இஸ்லாத்தை அறிவோம்”-பஹ்ரைனில் சிறப்புடன் நடைபெற்ற சமூக கருத்தரங்கம்

BAHRAIN INDIA FRATERNITY FORUM  (BIFF) ஏற்பாடு செய்திருந்த  என்ற இஸ்லாமிய சமூக நிகழ்ச்சி கடந்த 01.07.11 வெள்ளியன்று மனாமா செண்டரில் பொலிவுடன் நடைபெற்றது. சரியாக மாலை 7 மணிக்கு நிகழ்ச்சி துவங்கியது. ஆரம்பமாக அருள்மறை வசனங்களை ஓதினார் சகோ. சாலிம் அவர்கள். அதன் பின்னர் சகோ. அப்துல் சத்தார் அவர்கள் அனைவரையும் வரவேற்று, அறிமுகவுரை ஆற்றினார். நிகழ்ச்சியை சகோ .அப்துல் மஜீத் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.


பின்னர் “நம்மை நாமே புனரமைப்போம்” என்ற தலைப்பில் சகோ. மௌலவி . சர்புதீன் பைஜி அவர்கள் உரை நிகழ்த்தினார். சமுதாயப் புனரமைப்புக்கு மூல காரணமாக விளங்குவது தன்னைத் தானே புனரமைப்பது தான் என்று கூறிய அவர், சுய மாற்றத்திற்கான வழிவகைகளை அழகுற எடுத்துரைத்தார்.

சமுதாயப் புனரமைப்பின் அடுத்த காரணியாக விளங்கும் “குடும்பத்தைப் புனரமைப்போம்” என்ற தலைப்பில்  இஸ்லாமிய அழைப்பாளர் சகோ .அப்துல் ஹமீது அவர்கள் உரை நிகழ்த்தினார். குடும்பம் ஒரு பல்கலைக்கழகமாக மிளிர வேண்டுமெனில் அங்கே செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து குறிப்பிட்ட அவர், ஒட்டு மொத்த சமுதாய வளர்ச்சியில் குடும்பம் எத்தகைய பங்கு வகிக்கின்றது. குடும்ப அமைப்பு முறை சீர்கெட்டு வருவதால் சமூகத்தில் ஏற்பட்டு வரும் பல்வேறு சீர்கேடுகள் பற்றியும் அவற்றிலிருந்து குடும்பங்களை இஸ்லாமிய அடிப்படையில் புனர் நிர்மானம் செய்வது பற்றியும் குறிப்பிட்டார்.




இறுதியாக, நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக “சமுதாயத்தைப் புனரமைப்போம்” என்ற தலைப்பில் சகோ .முகைதீன் அப்துல் காதர் அவர்கள் உரை நிகழ்த்தினார். முஸ்லிம் சமுதாயம் தொய்வுற்ற பொழுதெல்லாம் வரலாறு நெடுகிலும் அது புனர் நிர்மாணம் செய்யப்பட்டதை வரலாற்றுக் குறிப்புகளோடு நினைவு கூர்ந்தார் அவர். இன்றைய இந்திய முஸ்லிம்களின் நிலையைக் குறிப்பிட்ட அவர், சமுதாய மாற்றத்திற்கு முஸ்லிம்கள் செய்ய வேண்டிய கடமைகளைப் பட்டியலிட்டார்.

முஸ்லிம் உம்மத்தில் உள்ள சிற்சில பலகீனங்களை களைந்து முஸ்லிம் உம்மத்தை இஸ்லாமிய அடிப்படையில் மீண்டும் புனரமைக்கும் பட்சத்தில் தான் இந்த உலகத்தில் உள்ள ஓட்டு மொத்த மனித குலமும் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ முடியும்  என்பதையும் குர்ஆன் வரலாறு மற்றும் புள்ளிவிபரங்களின் ஊடாக  விரிவாக விளக்கியதுடன் இன்றைய சமூகத்திற்கு தேவையான துணிவு ,பொறுப்புணர்வு, இலட்சியம், ஒற்றுமை, தலைமைத்துவம் என்பவைகளை பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

பஹ்ரைனில் வாழும் தமிழ் முஸ்லிம்கள் தமது கோடை விடுமுறையை வீணாக்கி விடாமல் இருக்கவும் எதிர்வரும் ரமலான் அனைவரது வாழ்கையில் ஒரு புனர் நிர்மானத்தை ஏற்படுத்தவும் இப்பயிற்சி முகாம் உதவும் வகியில் அமைந்தது. இறுதியாக அனைவருக்கும் இரவு உணவு வழங்கியதோடு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

 நன்றி : தூது இணையதளம்

No comments:

Post a Comment