Monday 4 July 2011

சிறுவன் தில்ஷன் படுகொலை-ராணுவ வீரர்களிடம் சிபிசிஐடி டிஐஜி அதிரடி விசாரணை

சென்னை: சிறுவன் தில்ஷன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான சிபிசிஐடி விசாரணை தொடங்கியுள்ளது.

சென்னை தீவுத் திடல் அருகே உள்ள ராணுவக் குடியிருப்புக்குள் புகுந்து கீழே விழுந்து கிடந்த பாதாம் பழங்களை எடுக்க முயன்றான் தில்ஷன். அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் அவன் படுகாயமடைந்து மருத்துவமனையில் உயிரிழந்தான்.



அவனை சுட்டது ராணுவ வீரர் என்று கூறப்படுகிறது. ஆனால் ராணுவம் இதை மறுத்துள்ளது. எங்களது தரப்பிலிருந்து யாரும் சுடவில்லை என்று ராணுவம் கூறுகிறது. ஆனால் தில்ஷன் உடலில் நடந்த பிரேதப் பரிசோதனையில் தில்ஷன் தலையில் குண்டு பாய்ந்து அதனால்தான் அவன் இறந்ததாக தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து இன்று காலை சிபிசிஐடி விசாரணை தொடங்கியது.

சிபிசிஐடி டிஐஜி ஸ்ரீதர் சம்பவ இடத்திற்குச் சென்று துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் சம்பவத்தின்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த, ராணுவ வீரர்களிடமும் ஸ்ரீதர் விசாரணை நடத்தினார்.

விசாரணைக்கு ராணுவம் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக ஏற்கனவே உறுதி அளித்துள்ளது. விரைவில் தில்ஷனுடன் அருகில் இருந்த 2 சிறுவர்களை வைத்து அடையாள அணிவகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே தில்ஷன் உடலில் பாய்ந்த குண்டை வைத்து ஆய்வு நடத்திடவும் போலீஸ் தரப்பி்ல் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தடயவியல் நிபுணர்களின் உதவி கோரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment