Thursday 2 June 2011

மாணவிகளுக்கான மேல்நிலை கல்வியை இலவசமாக வழங்கும் மனிதநேய அறக்கட்டளை


சென்னை: "பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு இலவச கல்வி அளிக்கப்படும் என மனிதநேய அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் மல்லிகா துரைசாமி தெரிவித்துள்ளார்.
  
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிராமப்புற ஏழை மாணவிகள் மத்தியில், ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ். பற்றிய விழிப்புணர்வு வேண்டும். அண்ணா பல்கலை, அரசு மருத்துவக் கல்லூரிகளில், உயர்கல்வி பயில அவர்களுக்கு இடம் கிடைக்க வேண்டும். இவற்றை கருத்தில்கொண்டு, பத்தாம் வகுப்பு தேர்வில், தமிழ் வழியில் பயின்று,
360 மதிப்பெண்களுக்கு மேல் வாங்கிய மாணவிகளில், கணினி மற்றும் வணிகவியல் பாடப்பிரிவில் பயில உள்ள அனைவருக்கும், மேல்நிலைப் பள்ளிக்கல்வி இலவசமாக வழங்கப்படும்.
  
ஆங்கில வழியில் பயின்று, 460 மதிப்பெண்களுக்கு மேல் வாங்கிய மாணவிகளில், உயிரியல், கணிதப் பாடப்பிரிவில் பயில உள்ள 50 பேருக்கு, உணவு, தங்குமிட வசதியுடன் இலவசக்கல்வி வழங்கப்படும். தமிழகத்தின் அனைத்து பகுதி மாணவிகளும் இதற்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள், மதுரை, மேலூரில் உள்ள சைதை துரைசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சேர்க்கப்படுவர்.
  
மேலும் விவரங்களை, முதல்வர், சைதை துரைசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 7/1, பைபாஸ் சாலை, மேலூர், மதுரை, என்ற முகவரியிலும், 0452- 320545, 94430 49599, 94875 19599 ஆகிய எண்களிலும் பெறலாம். இவ்வாறு மல்லிகா துரைசாமி தெரிவித்துள்ளார்.

நன்றி : Campus Front of India, Chennai

No comments:

Post a Comment