Thursday 2 June 2011

மின் உற்பத்தி குறைவுக்கு முக்கிய காரணம் ஊழலே: முதல்வர் ஜெயலலிதா!


தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பெரிய அளவில் நடந்துள்ள ஊழலே, மின் உற்பத்தி குறைவுக்கு முக்கிய காரணம் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
 புனித ஜார்ஜ் கோட்டை, தலைமைச் செயலகத்தில் நேற்று செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசியபோது முதல்வர் ஜெயலலிதா, ”மின் உற்பத்தி குறைவுக்கு முக்கிய காரணங்களில் ஒன்று, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பெரிய அளவில் நடந்துள்ள ஊழல்தான். அதிலும் முக்கியமாக தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதுதான்.” என்று  கூறியுள்ளார்.
மேலும் சில கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில், அதிகாரத்தில் உள்ளவர்கள் பலத்த கமிஷன் பெறுவதற்காக, வேண்டுமென்றே மின் உற்பத்தி குறைக்கப்பட்டு, தனியார் நிறுவனங்களிடமிருந்து பெருந்தொகை கொடுத்து மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது என்ற புகாரும் எழுந்துள்ளது. 
கடந்த ஆட்சியின்போது, சரியாகத் திட்டமிடாததும் மின் உற்பத்தி சரிந்ததற்கு காரணமாகியுள்ளது. மின் உற்பத்தி செய்யும் பல்வேறு அனல்மின் நிலையங்களும் ஒரே நேரத்தில் பராமரிப்பு செய்வதற்காக நிறுத்தப்படக்கூடாது. ஒவ்வொன்றாக நிறுத்தி பராமரிப்பு வேலைகள் செய்யப்படவேண்டும்.
கடந்த ஆட்சியின்போது சரியான திட்டமிடுதல் இல்லாததாலும்,சரியான நிர்வாகம் இல்லாததாலும், முக்கிய அனல்மின் நிலையங்கள் பல நாட்கள் நிறுத்தி வைக்கபட்டது மின் உற்பத்தி குறைவுக்கு வழிகோலியுள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.
அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி, 5,000 மெகாவாட் அளவிற்கு மின் உற்பத்தியை உயர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், மின் கட்டணத்தில் மாற்றம் எதுவும் இருக்காது என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment