Wednesday 28 September 2011

அப்சல் குருவுக்கு மன்னிப்பு கோரும் தீர்மானம்- சட்டசபையில் காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதாவின் திசை திருப்பும் செயல்!

 ஸ்ரீநகர்: நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அப்சல் குருவுக்கு மன்னிப்பு அளிக்கக் கோரும் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ள நிலையில், பெரும் அமளி ஏற்பட்டதால் ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபை இன்று காலை பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.

நேற்று இந்த தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இன்று ஓட்டெடுப்புக்கு விடப்படுகிறது. ஆனால் ஓட்டெடுப்பு நடைபெறாத வகையில் பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டுள்ளதால் காலை முதல் பலமுறை சட்டசபை ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.

இந்தத் தீர்மானத்திற்கு ஆளுங்கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சி, எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன. காங்கிரஸ் கட்சி இதுவரை தெளிவான கருத்தைத் தெரிவிக்கவில்லை. மனசாட்சிப்படி தங்களது எம்.எல்.ஏக்கள் வாக்களிக்கலாம் என்று மட்டும் காங்கிரஸ் கோரியுள்ளது. பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

முன்னதாக இந்த தீர்மானம் மீது நேற்று சூடான விவாதம் நடந்தது. இன்று ஓட்டெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்றுகாலை சபை கூடியது. ஆனால் தொடர் அமளிகள் காரணமாக சட்டசபை சுமூகமாக நடைபெற முடியாத நிலை காணப்படுகிறது.

முதலில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதியில் கூடி, கடந்த குளிர்காலக் கூட்டத் தொடரின்போது கட்சி மாறி ஓட்டுப் போட்ட பாஜக எம்.எல்.ஏக்களை நீக்க வேண்டும் என்று கோரி போராட்டத்தில் குதித்தனர். அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினரும் குரல் கொடுத்ததால் அமளி ஏற்பட்டது. இதையடுத்து சபை ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் அவை கூடியபோதும் அமளி தொடரவே மறுபடியும் சபை ஒத்திவைக்கப்பட்டது.

அப்சல் குருவுக்கு மன்னிப்பு கோரும் தீர்மானத்தை சுயேச்சை எம்.எல்.ஏ. என்ஜீனியர் ரஷீத் எனன்பவர் கொண்டு வந்துள்ளார். இதற்கு முதல்வர் ஒமர் அப்துல்லா ஆதரவு தெரிவித்துள்ளார். பாஜக கடுமையாக எதிர்த்து வருகிறது.

No comments:

Post a Comment