Friday 29 July 2011

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் காவல்துறையின் அராஜகம் - போ​லீஸ் உயர் அதிகாரியிட​ம் புகார்

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியைச் சார்ந்த சமூகத் தொண்டரும், ஆட்டோ ஓட்டுனருமான பாபுல் ஹுதா என்பவர் மீது குமரி மாவட்டம் தக்கலை காவல்நிலைய காவல்துறையினர் பொய்வழக்கை புனைந்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு அவரது மனைவியையும் தொந்தரவுச் செய்து மிரட்டிவருகின்றனர். காவல்துறையினரின் இந்த அராஜகம் குறித்து அவரது மனைவி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

இதுக்குறித்த விபரம் வருமாறு: குமரி மாவட்டம் திருவிதாங்கோடு, புளியடிவிளை பகுதியைச் சேர்ந்த பாத்திமா எனற பெண் நேற்று நாகர்கோவிலிலுள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்து தக்கலை காவல்துறை துணை ஆய்வாளர் மீது புகார் அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
எனது கணவர் பாபுல் ஹுதா ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். அவரது வாகனத்தை மட்டுமே நம்பி எனது குடும்பம் உள்ளது. சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு காவல் துறையினரால் புனையப்பட்ட 2 பொய் வழக்குகளில் நீதிமன்றம் எனது கணவரைக் குற்றமற்றவர் என தீர்ப்பளித்து இருந்த போதிலும் காவல்துறை பல்வேறு வழக்குகளில் எனது கணவரைத் தொடர்புபடுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதனைக் காரணமாகக் கொண்டு எனது கணவர் நிரபராதி எனத் தெரிந்தும் எனது கணவர் மீது குற்றம் சுமத்தி எங்களது வீட்டினுள் அத்துமீறி நுழைவதும் அராஜகம் புரிவதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

கடந்த 24ம் தேதி அதிகாலை சுமார் 3 மணி அளவில் தக்கலை துணை ஆய்வாளர் விஜயகுமார் தலைமையில் 5 பேர் சீருடையில்லாமல் வீட்டினுள் நுழைய முற்பட்டு கதவினை உடைக்கும் விதமாக தட்டினர். நான் மட்டும் குழந்தைகளுடன் தனியே இருந்தேன். நான் சத்தம் கேட்டு ஜன்னல் திறந்து யார் என விசாரித்தேன். பெண் காவலர் இல்லாமல் வந்திருந்ததால் நான் கதவை திறக்கவில்லை, இருப்பினும் தொடர்ந்து கதவை உடைக்கும் விதமாக தட்டவே அச்சத்துடன் கதவை திறந்தேன்.பின்னர் வீடு முழுவதும் தேடினர். என் கணவர் வீட்டில் இல்லாதது உண்மைதான் என்பதைத் தெரிந்து கொண்ட பின்னர், அவரது போட்டோவைக் கேட்டனர். நான் எனது கணவரின் புகைப்படத்தைக் கொடுத்தேன். என் கணவனை காலை 8 மணிக்குக் காவல் நிலையத்தில் ஒப்படைக்காவிட்டால் கொலை செய்துடுவோம் என கொலை மிரட்டல் விடுத்துவிட்டு விட்டு சென்றனர்.

இதன் தொடர்ச்சியாக துணை ஆய்வாளர் வியஜகுமார் தலைமையில் காவலர்கள் மீண்டும் 25ம் தேதி இரவு 12 மணி அளவில் வந்து கதவைத் திறக்க கூறினார். நான் பயந்து கதவைத் திறந்தவுடன் எனது கணவரின் ஆட்டோ சாவியைக் கேட்டனர். நான் கொடுத்ததும் ஆட்டோவை எடுத்துக் கொண்டு, மறுநாள் காலை 8 மணிக்குகள் எனது கணவர் காவல்நிலையத்திற்கு வரவில்லையென்றால் எனது குடும்பம் இந்த ஊரிலேயே இருக்காதபடி செய்து விடுவேன் என மிரட்டிச் சென்றனர்.

எனது கணவர் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்துவதைத் தவிர எந்த ஒரு சமூக விரோத செயலிலும் ஈடுபடுவது இல்லை. எங்கள் பகுதியில் அவருக்கு நற்பெயர் உண்டு. அனைவரது கஷ்டங்களுக்கும், ஓடோடி சென்று உதவி செய்து வாழ்ந்து வருகிறார். எந்தத் தொடர்பும் இல்லாமல் காவல்துறையினர் தொடர்ச்சியாக பொய் வழக்குகளில் சிக்க வைக்க முனையும் போது ஏற்படும் இழப்புகளால் எனது குடும்பம் பொருளாதார மற்றும் மன ரீதியான நெருக்கடிகளையும் சந்தித்து உள்ளது. இதேபோன்று நிலை காவல்துறையினரால் இனியும் தொடர்ந்தால் நாங்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்வதை தவிர வேறு வழிஇல்லை. எனவே எனது கணவர் மீது பொய் வழக்கு போடமுயன்று எங்களது வீட்டினுள் அத்துமீறி நுழைந்து அராஜகம் செய்து சட்ட விரோதமாக நடந்த காவலர் மற்றும் துணை ஆய்வாளர் விஜயகுமார் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று புகார் அளித்துள்ளார்.

பொதுவாகவே கன்னியாகுமரியில் காவல்துறையினர் மனித உரிமைகளை பேணுவதில்லை என்ற கருத்து சமூக ஆர்வலர்கள் மத்தியில் கருத்து உண்டு. இந்த மாவட்டத்திலிருந்து பிற மாவட்டங்களுக்கு மாற்றம் செல்லும் அதிகாரிகளிடமும் இந்த அராஜக போக்கை காணமுடிகிறது. குற்றம் நடந்தால் யாரையாவது பிடித்து அடித்து வழக்கை முடிக்கும் பாணியும், நாம் போலிஸ், என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்ற போக்கு சாதாரணமாக இம்மாவட்டத்தில் பார்க்க முடிகிறது. காவல்துறையின் இந்த மனநிலைக்கு தகுந்த காரணிகளை அரசு கண்டுபிடித்து களைய சிறப்பு கவனம் எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றார்கள்.

No comments:

Post a Comment