Friday 3 June 2011

புதிய தலைமைச் செயலக கட்டுமானப் பணிகள் நிறுத்தம்-விசாரணை நடத்தப்படும்: ஆளுநர்


சென்னை: புதிய தலைமைச் செயலக கட்டுமானப் பணிகள் நிறுத்திவைக்கப்படுகின்றன. கட்டுமானப் பணிகள் குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்தப்படும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள 14வது சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. காலை அவை கூடியதும் ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா தனது உரையை தொடங்கினார்.

உரையில்இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

- 3வது முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்துள்ள ஜெயலலிதாவுக்கும், பெரும் வெற்றியுடன் ஆட்சி அமைத்துள்ள அதிமுகவுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

- புதிய தலைமைச் செயலக கட்டுமானப் பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதுவரை நடந்த கட்டுமானப் பணிகள் குறித்து விசாரணை நடத்தப்படும். ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெறும்.

- சென்னையில் மோனோ ரயில் திட்டம் அமல்படுத்தப்படும். முதல் கட்டமாக 111 கிலோமீட்டர் தொலைவுக்கு மோனோ ரயில் திட்டம் அமல்படுத்தப்படும்.
தற்போது நடந்து வரும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முடிய கால தாமதமாகும் என்பதால் மோனோ ரயில் அறிமுகப்படுத்தப்படுகிறது. படிப்படியாக இது 300 கிலோமீட்டர் தொலைவுக்கு அதிகரிக்கப்படும். மெட்ரோ ரயில் திட்டம் 45 கிலோமீட்டருக்கு மட்டுமே அமல்படுத்தப்படும்.

- மதுரை, கோவை, திருச்சியிலும் மோனோ ரயில் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

- 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப்கள் வழங்கப்படும்.

- கலைஞர் காப்பீட்டுத் திட்டம் ரத்து செய்யப்படுகிறது. அதற்குப் பதில் புதிய பொது மருத்துவ காப்பீட்டுத் திட்டம் அமல்படுத்தப்படும்.

- விலைவாசியைக் கட்டுப்படுத்த பொது விநியோகத் திட்டம் வலுப்படுத்தப்படும். கள்ளச்சந்தை, பதுக்கலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

- தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் தற்போது இயங்கி வரும் அண்ணா பல்கலைக்கழகங்கள் இணைக்கப்பட்டு சென்னையில் மட்டுமே இனி அண்ணா பல்கலைக்கழகம் இயங்கும்.

செப்டம்பர் 15 முதல் இலவச மிக்சி கிரைண்டர்

- எம்.ஜி.ஆரால் கலைக்கப்பட்ட சட்ட மேலவையை மீண்டும் கொண்டு வரப் போவதில்லை.

- அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி முதல் இலவச மிக்சி கிரைண்டர் வழங்கப்படும்.

- அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி முதல் 9.12 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும்.

- சமச்சீர் கல்வித் திட்டம் செம்மையாக்கப்படும். சமச்சீர் கல்வி பாடத்திட்டத்துக்கான பரிந்துரையை அளிக்க வல்லுநர் குழு அமைக்கப்படும்.

- சட்டம் ஒழுங்கு நிலைநாட்டுதல், பொருளாதாரத்தை மேம்படுத்துவதே முதன்மைப் பணி.

- மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு ரூ. 1000லிருந்து ரூ. 2000 வழங்க உத்தரவு. 

- மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 6ம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

- மாநிலங்களுக்கிடையிலான நதி நீர்ப் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை.

- மத்திய, மாநில அரசுகளுக்கிடையே சுமூக உறவு ஏற்படும் வகையில் அதிமுக அரசு செயல்படும்.

- மரபு சாரா எரிசக்தி மூலம் மின்உற்பத்தி செய்ய தனிக் கொள்கை வகுக்கப்படும்.

- 500க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட கிராமங்களுக்கு தார்ச்சாலகள் அமைக்கபபடும்.

- பொது மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு தனியார் கேபிள் டிவி சேவை அரசுடமையாக்கப்படும்.

- சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் தொடங்கப்படும்.

தமிழ்நாடு 2025 தொலைநோக்குத் திட்டம்:

- தமிழ்நாடு 2025 தொலைநோக்குத் திட்டம் வகுக்கப்படும்.

- தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சிமொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

- அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 3 மாதத்திலிருந்து 6 மாதமாக உயர்த்தப்படும்.

- நீதிமன்றத்தில் தமிழை பயன்படுத்த வலியுறுத்தப்படும்.

இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு பெற நடவடிக்கை:

- இலங்கையில் போரினால் பெரும்பாலான தமிழர்கள் கொல்லப்பட்டு விட்டனர். எஞ்சியுள்ள தமிழர்களும் உரிய கெளரவத்துடன் அவரவர் பகுதிகளிலேயே வாழ, உரிய மறுவாழ்வு நடவடிக்கைகளை இலங்கை அரசு எடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது இந்த அரசு.

- தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். அகதிகளின் குழந்தைகள் கல்வி பயில தேவையான வசதிகள் செய்து தரப்படும். அவர்கள் வேலைவாய்ப்பு பெற சிறப்பு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படும்.

தமிழக அரசின் அனைத்து நலத் திட்டங்களும், இலங்கைத் தமிழ் அகதிகளுக்கும் நீட்டிக்கப்படும்.

No comments:

Post a Comment