Saturday 6 August 2011

சிரிய அரசுக்கு எதிரான போராட்டம் - 2000 பேர் படுகொலை?

சிரியாவில் மக்கள் போராட்டத்தை கலைப்பதற்கு ஆளும் அரசு நடத்திய வன்முறைகளால் 2,000 பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலரும்,

வெளிவிவகார அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.


சமீபத்திய நாட்களாக நடைபெற்று வரும் அரசுக்கு எதிரான போராட்டத்தை இராணுவ பலத்தை கொண்டு அடக்க முற்பட்டதால் பலநூற்றுக்கணக்கான பொதுமக்களை கொன்று குவிக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், போராட்டங்களை அடக்குவதற்கு சிரிய அதிபர் எடுத்த பாரதூரமான முயற்சியினால், சிரியாவின் நற்பெயரை அவர் இழந்து விட்டார் எனவும், தனது சொந்த மக்களையே படுகொலை செய்ய துணிந்துவிட்டார் எனவும் குற்றம் சுமத்தியுள்ள ஹிலாரி கிளிண்டன், சிரியாவில் கொல்லப்பட்ட 2,000 ற்கு மேற்பட்ட பொதுமக்களின் உயிர்களுக்கு, அசாத்தின் அரசே பொறுப்பு கூறவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஸ்னைப்பர் துப்பாக்கிகள், யுத்த தாங்கிகள் மூலம், மக்கள் குறிவைக்கப்படுவதாகவும், உணவு மற்றும் ஏனைய பொருட்களுக்கு பற்றாக்குறை நிலவ தொடங்கியுள்ளதாகவும், குறித்த கலவரங்களில் பாதிக்கப்பட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

சிரியாவில் கடந்த மார்ச் மாதம் சிரிய அதிபர் பாஷார் அல் அசாத்துக்கு எதிராக மக்கள் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இதுவரை சுமார் 1,600 பொதுமக்கள் போராட்டங்களின் போது உயிரிழந்துள்ளதாக மனித உரிமை அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. குறிப்பாக ஹாமாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் 150 க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ஆயுதம் ஏந்திய கிரிமினல் குழுக்களே இந்த படுகொலைகளுக்கு பின்னால் இருப்பதாகவும், அவர்களை வெளிநாட்டு சக்திகள் வழிநடத்துவதாகவும் சிரிய அதிபர் அசாத் குற்றம் சுமத்தியிருந்தார்.

No comments:

Post a Comment