Monday 13 June 2011

களவு ராம்தேவும் ஊழலுக்கு எதிரான போரும் ஓர் அலசல்!

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் என மாபெரும் ஊழல்கள் வெளியாகி இந்தியாவின் மதிப்பைச் சிதைத்துக் கொண்டிருந்த நிலையில், திடீரென ஊழலுக்கு எதிரான போரை ஆங்கில ஊடகங்கள் செய்யத் தொடங்கின.

அரபு நாடுகளில் தோன்றிய மக்கள் புரட்சியின் விளைவாய் அதிபர்களாய் இருந்தவர்கள் தங்கள் நாடுகளை விட்டுத் துரத்தப்பட்ட நேரம் அது. இதுதான் நமது கோரிக்கையை வென்றெடுக்க சரியான சந்தர்ப்பம் என்று எண்ணி, மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் காந்தியவாதியுமான அண்ணா ஹசாரே ஊழலுக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதத்தைத் தொடங்குகிறார். லோக்பால் மசோதாவை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் இவரது கோரிக்கை.

அண்ணா ஹசாரேயின் உண்ணாவிரதத்தை ஆங்கில ஊடகங்கள் பிரதானப்படுத்தியதைத் தொடர்ந்து புனே, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, சென்னை, பாட்னா, போபால், அகமதாபாத், ராஞ்சி, நாசிக், கொச்சி, ஜம்மு உள்ளிட்ட இந்திய நகரங்களில் மட்டுமின்றி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் இந்திய அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

1969ஆம் ஆண்டிலிருந்து 42 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த லோக்பால் மசோதாவை, அண்ணா ஹசாரேவின் மூன்று நாள் உண்ணாவிரதம் மூலம் மத்திய அரசு ஏற்றுக் கொண்டு விட்டதாக ஊடகங்கள் பிரச்சாரம் செய்ததின் விளைவாய் அண்ணா ஹசாரே ஊழலுக்கு எதிரான சராசரி இந்தியர்களின் புதிய ஹீரோவாக அறிமுகம் செய்யப்பட்டார்.


ஆச்சரியமான வகையில் ஊழலுக்கு எதிரான புது ஹீரோவுக்கு எதிராகவே ஊழல் புகாரொன்று பதிவாகியிருந்த தகவலும் அவரின் சில வண்டவாளங்களும் வெளிவரத்துவங்கியதோடு அவரை மையப்படுத்திய ஊடகங்கள் அவரை அம்போவென விட்டு ஒதுங்கின.
இந்நிலையில் இப்போது, பாபா ராம்தேவ் மற்றும் ரவிசங்கர் பாபா போன்ற ஆன்மிகப் பிரபலங்களின் "ஊழலுக்கு எதிரான இந்தியா" என்ற அமைப்பு அரசால் முன்வைக்கப்படும் லோக்பால் மசோதாவுக்கு மாற்றாக ஜன் லோக்பால் மசோதா என்ற ஒன்றை முன் வைத்தது. ஜன் லோக்பால் மசோதாவை ஏற்றுக் கொள்வதில் இழுபறி நீடிக்கவே, அண்ணா ஹஸாரேவைத் தொடர்ந்து, இப்போது பாபா ராம்தேவ் உண்ணாவிரதப் போராட்ட எச்சரிக்கையை மத்திய அரசை நோக்கி வீசியுள்ளார்.

பாபா ராம்தேவை சமாதானப்படுத்த காங்கிரஸ் கட்சியின் சார்பிலும் மத்திய அரசின் சார்பிலும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் பாபா ராம்தேவ் ஏற்க மறுத்துவிட்டார். 2014ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் தமது சார்பில் வேட்பாளரை நிறுத்துவேன் என்றும் ராம்தேவ் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னர் அன்னா ஹஸாரே ஊழலுக்கு எதிராக களமிறங்கியதும் அவருக்கு ஆதரவாக முன்னணி ஊழல்வாதிகளே உண்ணாவிரத அரங்கை அலங்கரிக்கச் சென்றனர். பின்னர் அவர் மீதே ஊழல் குற்றச்சாட்டு இருப்பது வெளியானது.


இப்போது களம் கண்டுள்ள பாபா ராம்தேவ்?


இவர் மட்டும் யோக்கியமா என்ற குரல் நாடெங்கும் இப்போதே ஒலிக்கத் தொடங்கி விட்டன.


யார் இந்த பாபா ராம் தேவ்?


இதைத் தெரிந்து கொள்ளும் முன் அவரது கோரிக்கைகள் என்ன என்பதை முதலில் அறிந்து கொள்வோம்.

- ஊழல் செய்வோருக்கு - குறிப்பாக ஊழல் அதிகாரிகளுக்கு - மரண தண்டனை அளிக்க வகை செய்யும் வகையில் லோக்பால் மசோதா கடுமையாக இருக்க வேண்டும்.

- இந்தியாவுக்கு வெளியே பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தையும் உடனடியாக மீட்க வேண்டும்.
- சட்டத்துக்குப் புறம்பான வகையில் வருமானம் ஈட்டி, வெளிநாடுகளில் குவிக்கப்பட்டுள்ள இந்தியர்களின் சொத்துகளை இந்தியாவின் தேசிய சொத்துகள் என்று அறிவிக்க வேண்டும். இவ்வாறு சொத்து சேர்த்தவர்களைத் தேசவிரோத சட்டத்தின் கீழ் விசாரணை செய்ய வேண்டும்.

- 1000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை ஒழிக்க வேண்டும்.

- வரி ஏய்ப்புக்குச் சாதகமாக உள்ள நாடுகளைச் சேர்ந்த வங்கிகளை இந்தியாவில் தடை செய்ய வேண்டும்.

- ஆட்சி, நிர்வாகம், வரிவிதிப்பு, கல்வி மற்றும் சட்டம் போன்றவற்றில் நடைமுறையில் உள்ள பிரிட்டீஷ் நடைமுறைகளை மாற்றி இந்திய நடைமுகைளப் பின்பற்ற வேண்டும்.

- அனைத்துக் குடிமக்களும் தங்களின் ஆண்டு வருமானத்தை வெளியிடுவதை உறுதி செய்ய வேண்டும்.

- இந்தியர்களின் வரிமான வரி விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற வழிவகை செய்ய வேண்டும்.

- பல்வேறு தொழிலாளர்களுக்கும் நாடு முழுவதும் ஒரே அளவில் கூலி கொடுக்க வகை செய்ய வேண்டும்.

- தொழிற்சாலைகள் நிறுவுவதற்காக விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கக் கூடாது என்பதால், நில ஆர்ஜித சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்.

- ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்தி மொழியை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

நன்று!


அனைத்து கோரிக்கைகளும் வரவேற்கப்பட வேண்டியவையே!

இந்தியாவின் முன்னேற்றத்துக்கும் சாதாரண ஏழை மக்களின் தினசரி வாழ்வுக்கும் மிகப் பெரும் சவாலாக விளங்கிவரும் ஊழலெனும் அரக்கனை இல்லாமல் அழித்தொழுக்க வேண்டுமென்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. அதற்காக ஒவ்வொரு இந்திய குடிமகனும் போராட்டக் களம் காணவேண்டிய காலம் அண்மித்துவிட்டதும் உண்மையே!

ஆனால், கள்வனே திருட்டுக்கு எதிராக பொதுமக்கள் முன்னிலையில் ஹீரோவாவது இந்தியாவில் மட்டுமே நடக்கும் அதிசயம்!

இப்போதைய ஊழலுக்கு எதிரான புது ஹீரோ பாபா ராம் தேவ் குறித்து அறிவோம்:

1965ஆம் ஆண்டு ஹரியாணா மாநிலத்தில் பிறந்த பாபா ராம்தேவ், உள்ளூர் பள்ளியொன்றில் எட்டாம் வகுப்பு வரை கல்வி பயின்றார். பின்னர் சமஸ்கிருதத்தையும் யோகாவையும் கற்றுக் கொண்டார்.

ஆஸ்தா தொலைக்காட்சியில் தோன்றி யோகா பற்றிய நிகழ்ச்சிகளை வழங்கியதால் பிரபலம் அடையத் தொடங்கினார். தொலைக்காட்சியில் தோன்றிய சில ஆண்டுகளுக்குள்ளாகவே, பதஞ்சலி யோக பீடம் என்ற பெயரில் டிரஸ்டு ஒன்றை ஏற்படுத்தினார். 2006ஆம் ஆண்டு குடியரசுத் துணைத் தலைவராக இருந்த பைரோன் சிங் செகாவத் இந்த டிரஸ்டின் கட்டடத்தை ஹரித்வாரில் திறந்து வைத்தார்.

பதஞ்சலி ஆயுர்வேத கல்லூரி, பதஞ்சலி சிகித்சாலாயா, யோக் கிராம், கோ-சாலா, பதஞ்சலி ஹெர்பல் பொட்டானிகல் கார்டன், ஆர்கானிக் அக்ரிகல்சுரல் ஃபார்ம், பதஞ்சலி ஃபுட் அண்ட் ஹெர்பால் பார்க் லிமிடெட் போன்ற நிறுவனங்கள் பாபா ராம்தேவின் நிறுவனங்களில் சில.

இது தவிர, பிரிட்டனின் ஸ்காட்லாந்தில் வசிக்கும் இந்தியரான சுனிதா பொட்டார் என்பவர், இங்கிலாந்தின் கிளாஸ்கோ அருகில் உள்ள வடக்கு அய்ர்ஷைர் என்ற குட்டித் தீவையே பாபா ராம்தேவின் பாதாஞ்சலி அறக்கட்டளைக்கு அன்பளிப்பாக அளித்துள்ளார். ஆட்கள் வசிக்காத அந்தத் தீவின் விலை சுமார் 45 கோடி ரூபாய்கள். இந்தத் தீவில் யோகா மையம் அமைக்குப் பணியும் நடைபெறும் நடைபெற்று வருகிறது. இது முழுமை அடையும்போது அந்தத் தீவின் மதிப்பு சுமார் 100 கோடி ரூபாய்களாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இவ்வளவு கோடிக்கணக்கான சொத்துக்களை மிகக் குறுகிய காலத்தில் சேர்த்துக்கொண்டுள்ள பாபா ராம் தேவ், இப்போது உண்ணாவிரதம் இருக்கப்போகும் அரங்கிற்கான செலவு மட்டுமே 18 கோடியைக் கடக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த 18 கோடி பணம் எங்கிருந்து வந்தது? யார் கொடுத்தது? அது வருமான வரி கட்டப்பட்ட தொகையா? போன்ற கேள்விகளுக்கு விடை சொல்வார் யாருமில்லை!

"ராம் தேவின் பின்னணியில் ஆர் எஸ் எஸ் இருக்கிறது" என்று ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகள் அணிவகுக்கத் தொடங்கியுள்ளன. இதனாலே மேதாபட்கர் போன்ற சமூகப் போராளிகள் இவரின் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடதக்கது.

பாபா ராம்தேவின் கோரிக்கைகளில் ஒன்று, "பல்வேறு தொழிலாளர்களுக்கும் நாடு முழுவதும் ஒரே அளவில் கூலி கொடுக்க வகை செய்ய வேண்டும்". ஆனால், பாபா ராம்தேவ் நடத்திவரும் ஆசிரமத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்களுக்குப் போதிய ஊதியம் தரவில்லை என்று கூறி பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளனர். ஆயுர்வேதத்தையும் இந்தியக் கலாச்சாரத்தையும் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் தொழிலாளர் சட்டங்கள் மதிக்கப்படாமல் இருந்ததையும் நுகர்வோர் உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டதையும் சுட்டிக் காட்டி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி போராட்டங்களையும் நடத்தி உள்ளது.


ராம்தேவுக்குச் சொந்தமான ஹரித்துவாரில் உள்ள திவ்ய யோக் மந்திர் டிரஸ்டின் 115 பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து போராட்டக் களத்தில் குதித்த பிருந்த கரத், ராம் தேவ் தயாரித்தளிக்கும் ஆயுர்வேத மருந்துகளில் என்னென்ன பொருள்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதைத் தெரிவிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

இவரது ஆயுர்வேத மருந்துகளில் மனித மற்றும் விலங்குகளின் எலும்புக் கழிவுகள் சேர்க்கப்பட்டிருப்பதையும் பிருந்தா கரத் நிரூபித்து இருந்தார். இதில் மற்றொரு ஆச்சரியம் இதே பாபா ராம் தேவ், பசுவதைக்கு எதிராக மரணதண்டனை கொடுக்க வேண்டும் என குரல் கொடுத்துள்ளதுதான். பாபாவின் மருந்துகளில் மனித மற்றும் விலங்குகளின் எலும்புக் கழிவுகள் சேர்க்கப்பட்டுள்ளதை நிரூபித்த பிருந்தாவுக்கு எதிராக வெகுண்டெழுந்த பாஜக மற்றும் விசுவ இந்து பரிஷத்தினர் பிருந்தாவை வெளிநாட்டு ஏஜென்ட், யோகாவுக்கு எதிரானவர், ஆயுர்வேதத்திற்கு எதிரானவர், தேசவிரோதி என்றெல்லாம் வர்ணித்தனர்.

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் அவுரங்காபாத் கிராமத்தில் பதஞ்சலி என்ற யோஹபீடம் நிறுவுவதற்கு உள்ள நான்கு ஹேக்டர் அரசுக்கு சொந்தமான விவசாய நிலத்தை பாபா ராம் தேவ் கள்ளத்தனமாக பதிவு செய்து கையகப்படுத்தியது தொடர்பாக ஒரு வழக்கும் இவர் மீது உண்டு. இவ்வழக்கில், மாவட்ட நீதிபதியால் நேரடியாகவே கள ஆய்வுசெய்யப்பட்டு விவசாய நிலத்தைப் பாபா ராம்தேவ் களவாடியது நிரூபிக்கப்பட்ட உடன், இப்போது அந்த நிலத்திற்கு ஈடாக விவசாயிகளுக்கு வேறு நிலம் வழங்குவதாக பாபா ராம்தேவ் அறிவித்துள்ளார்.

இத்தகைய சிறப்புகளை உடைய பாபா ராம்தேவைத்தான் இன்று ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் தளபதியாக, அடுத்த ஹீரோவாக ஊடகங்கள் முன்னிறுத்துகின்றன.

No comments:

Post a Comment