Saturday 21 May 2011

ஜாதிவாரி ஜனத்தொகை மற்றும் ஏழைகள் கணக்கெடுப்பு : மத்திய அரசு அனுமதி!


ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளவர்கள் கணக்கெடுப்பு நடத்த, மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. ஏழை மக்களைக் கண்டறிய,  இந்திய அளவில் கணக்கெடுப்பு நடத்தப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
 இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜனத்தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படுகிறது.  ஆனால் ஜாதி அடிப்படையில் எடுக்கப்படுவதில்லை. 80 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் அரசால் 1931ஆம் ஆண்டு, ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. 
நேற்று டெல்லியில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளவர்கள்கணக்கெடுப்பு நடத்த முடிவெடுக்கப்பட்டது.
மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி, இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 ஜாதி மற்றும் மதம் உட்பட ஏழைகளைக் கண்டறியவும், ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
 நகரங்கள் மற்றும் கிராமங்களில் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்வோரை கண்டறிய, கணக்கெடுப்பு நடத்தப்படும். இந்த கணக்கெடுப்பில், விவரம் கேட்கப்படும் போது, அவர்களின் ஜாதி மற்றும் மதம் குறித்தும் கேட்டறியப்படும்.
 இந்த இரண்டு வகையான கணக்கெடுப்பு பணியும் ஜூன் மாதம் துவங்கும். இந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் முடிவுக்கு வரும். அரசுக்கு 3,500 கோடி ரூபாய் செலவாகும்.
 ஏழைகளைக் கண்டறிய, பெரிய அளவில் கணக்கெடுப்பு நடத்தப்படுவது இதுவே முதல் முறை. விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
 இந்த ஜாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு பணிகளை, மாநில அரசுகள் மேற்கொள்ளும். இதற்காக பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தயாரித்த, குறைந்த செலவிலான சிறிய கையடக்க  கருவிகள் பயன்படுத்தப்படும்;  பேப்பர்கள் எதுவும் பயன்படுத்தப்படாது.
 வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்பவர்களில் எத்தனை பேர் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் எந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பது இதன் மூலம் கண்டறியப்படும்.
 நகரங்கள் மற்றும் கிராமங்களில் சேகரிக்கப்படும், வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்வோர் குறித்த இந்த விவரங்கள் எல்லாம், 12வது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் பயன்படுத்தப்படும்.
 சமூகம், பொருளாதாரம் குறித்த விவரங்களுடன் ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுமென, பார்லிமென்டில் மத்திய அரசு உறுதியளித்தது. அந்த உறுதிமொழி தற்போது காப்பாற்றப்பட்டுள்ளது.
 இப்பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்த முடியவில்லை எனில், மாநில அரசு ஊழியர்களே இதில் ஈடுபடுவர். இக்கணக்கெடுப்பில் ஏழு விதமான அளவீடுகள் பின்பற்றப்படும். இவ்வாறு அம்பிகா சோனி கூறினார்.

No comments:

Post a Comment