Saturday 21 May 2011

அவப்பெயர் பெற்ற தலைவர்களில் ஸ்பெக்ட்ரம் ராஜாவுக்கு இரண்டாமிடம்


நியூயார்க்: அமெரிக்காவின், "டைம்ஸ்' இதழ் வெளியிட்டுள்ள, முறைகேடாக அதிகார துஷ்பிரயோகம் செய்து அதனால் அவப்பெயர் பெற்ற தலைவர்கள் பட்டியலில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுக்கு இரண்டாமிடம் கிடைத்திருக்கிறது.
நியூயார்க்கில் இருந்து வெளியாகும், "டைம்ஸ்' இதழின் இப்பட்டியலில், முதலிடத்தில் இருப்பவர் டேனியல் எல்ஸ்பெர்க். இவர், அமெரிக்க முன்னாள் அதிபர் ரிச்சர்டு நிக்சன் அரசில், அந்நாட்டு ராணுவ ரகசியங்களை கசிய விட்டவர். இரண்டாம் இடத்தில் இருப்பவர், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலில் குற்றம் சாட்டப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா. லிபியா ஆட்சியாளர் முவாம்மர் கடாபி, வடகொரியா சர்வாதிகார ஆட்சியாளர் கிம் ஜாங் - 2, இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி ஆகியோரை பந்தயத்தில் முந்தி, ராஜா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். இவர்கள் எல்லாம் பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், ராஜா குறித்து, "டைம்ஸ்' இதழ் வெளியிட்டுள்ள செய்தியில், "முன்னர், அசைக்க முடியாத அளவிற்கு அதிகாரத்தில் பீடத்தில் அமர்ந்திருந்த இந்திய கூட்டணி ஆட்சிக்கு, தற்போது, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் சவாலாக அமைந்துள்ளது. இந்தியாவில் எப்போதும் நடைபெறும், குதிரை பேரத்தின் மூலம் மத்திய அமைச்சர் பதவியை பெற்றவர் ராஜா. "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலால், இந்திய அரசுக்கு 32 ஆயிரத்து 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய வரலாற்றிலேயே, இது மிகப்பெரிய ஊழல். இந்த ஊழலால், ராஜாவைச் சேர்ந்த கட்சி கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் பெரும் தோல்வியைத் தழுவியது. இந்திய நீதிமன்றத்தில், இந்த வழக்கு இஞ்ச், இஞ்சாக நகர்ந்து முன்னேறி வருகிறது' என்று அதில் கூறப்பட்டுள்ளது. இப்பட்டியலில், டைகோ தலைமை செயல் அதிகாரி டென்னிஸ் கோஸ்லோஸ்கி, இஸ்ரேல் முன்னாள் அதிபர் மோசி கத்சவ், சீனாவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் தலைவர் ஜெங் ஜியாவ்யு மற்றும் 1992ம் ஆண்டில் அமெரிக்காவின் உள்துறை அமைச்சராக இருந்த ஆல்பர்ட் பால் ஆகியோரின் பெயர் இடம் பெற்றுள்ளது.

No comments:

Post a Comment