Tuesday 31 May 2011

இன்று உலக புகையிலை எதிர்ப்பு நாள்!

உலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் இன்று கடைபிடிக்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து 1987 ம் ஆண்டு மே மாதம் 31 ஆம் நாளை சிறப்பு நாளாக அறிவித்தது.

உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இச்சிறப்பு நாளின் அறிவிப்பு மூலம் உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் புகையிலை சம்பந்தமான சுமார் 3.5 மில்லியன் இறப்புகளைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கிறது. 



புகையிலை குறித்தும் புகைப்பதனால் ஏற்படும் பாதிப்புக்களை பற்றியும் இளைய தலைமுறையினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்நாளை புகையிலை எதிர்ப்பு நாளாக உலகெங்கும் கடைபிடிக்கின்றனர்.

16 லட்சம் இந்தியர்கள் மரணம்

புகைப்பிடிப்பதாலும், புகையிலை பொருட்களை பயன்படுத்துவதாலும் உலகம் முழுவதும் 60 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இந்தியாவில் தினமும் 2465 பேர் வீதம், ஆண்டுதோறும் 9 லட்சம் பேர் புகையிலை தொடர்பான நோயால் இறக்கின்றனர். இந்தியாவில் 2020ல் 16 லட்சம் இறப்பார்கள் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது. இன்றைக்கு புகைப்பதை ஆண்மையின் கம்பீரமாக கருதும் இளைய தலைமுறையினர் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

புகையால் ஏற்படும் பாதிப்புகள்

புகையிலையால், நுரையீரல், கண் உட்பட உடலின் பல்வேறு உறுப்புகள் பாதிக்கும். புகையிலை தொடர்பான சிகரெட், பீடி போன்றவற்றை வாங்க தினமும் 20 ரூபாய் செலவழிக்க வேண்டியுள்ளதால், பொருளாதார பாதிப்பும் ஏற்படுகிறது. தோலின் தன்மைமாறி, சுருக்கங்கள் ஏற்பட்டு, எண்ணெய் பசை குறைந்து, இளம் வயதிலேயே முதுமை அடைந்தது போல் இருக்கும்.

எப்போதும் வாய் நாற்றம், இருமல் இருக்கும். பற்கள் மஞ்சளாகவும், கை விரல்கள் கறுப்பாகவும், ரத்தசோகை பிடித்தது போல் காணப்படும் என்று கூறும் மருத்துவர்கள் புகையை கைவிடுவது எளிது என்கின்றனர்.

வருங்கால சமுதாயத்தினர் புகையை உயிரைக் கொல்லும் பகையாக கருதி விட்டுவிட வேண்டும் என்பதும் மருத்துவர்களின் வேண்டுகோள்.

No comments:

Post a Comment