Thursday 4 July 2013

எகிப்தில் அராஜகம்!-முஹம்மது முர்ஸியை ஆட்சியில் இருந்து நீக்கியது ராணுவம்!

கெய்ரோ: 30 வருடங்கள் நீண்ட ஹுஸ்னி முபாரக்கின் அராஜகமான சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து மக்கள் நடத்திய எழுச்சிப்போராட்டத்தின் இறுதியில் எகிப்தில் முதன் முறையாக நடந்த ஜனநாயகரீதியான தேர்தலில் பெரும்பான்மை ஆதரவுடன் வெற்றிப் பெற்ற முஹம்மது முர்ஸியை அந்நாட்டின் ராணுவம் ஆட்சியில் இருந்து அகற்றியுள்ளது. அதிபர் முர்ஸியை ஆட்சியில் இருந்து வெளியேற்றியதாக ராணுவம் அறிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அட்லி மன்சூரை இடைக்கால அதிபராக ராணுவம் அறிவித்துள்ளது. அரசியல் சாசனத்தை ரத்துச் செய்துள்ளதாகவும், நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக வெளியிட்ட அறிவிப்பில் ராணுவத்தின் தலைவர் ஜெனரல் அப்துல் ஃபத்தாஹ் அல் ஸிஸி அறிவித்துள்ளார். நாட்டின் எதிர்காலம் தொடர்பான வழிகாட்டுதலையும் ராணுவம் அறிவித்துள்ளது. இதனை தேசிய நல்லிணக்க கவுன்சில் நடைமுறைப்படுத்துமாம்.

அரசு, எதிர்கட்சியினர், இளைஞர் அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் ராணுவம் பேச்சுவார்த்தை நடத்தியது. முன்னர் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டை தம் வசம் கொண்டுவந்தது ராணுவம்.

No comments:

Post a Comment