Monday 24 October 2011

2002 கலவரம் தொடர்பாக (நரபலி) மோடியை விசாரிக்க வேண்டும்- சுப்ரீம் கோர்ட் நியமித்த வக்கீல் அறிக்கை

டெல்லி: 2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரங்கள் தொடர்பான வழக்கில் முதல்வர் நரேந்திர மோடி விசாரிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நியமித்த வழக்கறிஞரின் அறிக்கை பரிந்துரைத்துள்ளதால் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மோடியை விசாரிக்கத் தேவையில்லை. அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் இல்லை என்று உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) ஏற்கனவே அறிக்கை அளித்துள்ள நிலையில் உச்சநீதிமன்றம் நியமித்த வக்கீல் குழு இவ்வாறு பரிந்துரைப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

2002ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி இரவு முதல்வர் நரேந்திர மோடி கூட்டிய கூட்டத்தில் தான் பங்கேற்றதாகவும், அப்போது முஸ்லீம்களுக்கு எதிரான கலவரம் குறித்து காவல்துறையினர் கண்டு கொள்ளக் கூடாது என்றும், புகார்கள் குறித்து பரிசீலிக்கக் கூடாது என்றும் மோடி உத்தரவிட்டதாக, மோடி அரசால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட் அதிரடியாக தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக அவர் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு அபிடவிட்டைத் தாக்கல் செய்திருந்தார். அதில், முஸ்லீம்களைத் தாக்கும் கலவரக்காரர்களை கண்டு கொள்ளாதீர்கள் என்று காவல்துறைக்கு மோடி உத்தரவிட்டார் என்று பட் தெரிவித்திருந்தார்.

இதை குஜராத் மாநில அரசு மறுத்தது. இந்த நிலையில் பட் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், பட் கூறியது குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரனை நியமித்தது. 

இதுகுறித்து விசாரித்த ராஜு ராமச்சந்திரன் தற்போது தனது அறிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்கனவே விசாரணைக்காக நியமித்துள்ள எஸ்ஐடியிடம் சமர்ப்பித்துள்ளார். அதில், பட் கூறியபடி அன்றைய இரவு மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை என்று குஜராத் மாநில அரசு கூறுவதற்கு போதிய, வலுவான ஆதாரம் இல்லை.

மோடி உள்ளிட்ட இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யாரையும் விடுவிப்பது என்பதை, பட் உள்ளிட்ட அனைத்து சாட்சிகளையும் குறுக்கு விசாரணை செய்த பிறகே தீர்மானிக்க வேண்டும்.

பட் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் சம்பவ தினத்தன்று மோடி வீட்டில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றனர். அவர்கள் அனைவரையும் விசாரணை நீதிமன்றம் முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார் ராஜு ராமச்சந்திரன்.

பட் சொல்வதை விசாரணை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டால், இந்த வழக்கில் நரேந்திர மோடியும் விசாரணைக்குட்படுத்தப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.


மோடி வீட்டில் நடந்த அந்தக் கூட்டத்திற்கு அடுத்த நாள்தான், அகமதாபாத்தில் குல்பர்க் ஹவுசிங் சொசைட்டியில் கலவரக்காரர்கள் புகுந்து பெரும் தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது முன்னாள் காங்கிரஸ் எம்.பி. இஹ்ஷான் ஜாஃப்ரி மற்றும் 68 பேர் உயிருடன் தீவைத்துக் கொளுத்தப்பட்டனர். தனது கணவர் கொலை செய்யப்பட்டதில் மோடிக்குத் தொடர்பு உண்டு. அவரது உத்தரவைத் தொடர்ந்தே இந்த கொடூரக் கொலை நடந்தது. எனவே அவரை விசாரிக்க வேண்டும் என்று ஏற்கனவே உச்சநீதிமன்றத்தை ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா அணுகியுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

ராஜூ ராமச்சந்திரன் அளித்துள்ள அறிக்கையில், குஜராத் கலவரம் நடந்தபோது பட், உளவுப் பிரிவுத் தலைவராக பணியாற்றி வந்தார். அப்படி இருக்கையில், அவருக்குத் தெரியாமல் மாநில காவல்துறையின் எந்த முக்கிய முடிவும் எடுக்கப்பட்டிருக்க வாய்ப்பி்ல்லை. மேலும் அவரை வைத்துக் கொள்ளாமல் முதல்வர் ஒருவர் கூட்டம் நடத்தியிருக்க வாய்ப்பில்லை என்று மேலும் கூறப்பட்டுள்ளது.

மேலும், மோடி மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகள் மீது வேண்டும் என்றே பட் குற்றம் சாட்டியிருக்கிறார் என்ற குஜராத் மாநில அரசின் புகாரையும் ராஜு ராமச்சந்திரன் நிராகரித்து விட்டார்.

ராஜு ராமச்சந்திரனின் இந்தப் புதிய அறிக்கையால் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இஷ்ரத் வழக்கில் எஸ்ஐடிக்குக் குழப்பம்

இதற்கிடையே, இளம்பெண் இஷ்ரத் ஜஹான் உண்மையிலேயே என்கவுன்டரில் கொல்லப்பட்டாரா அல்லது போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டாரா என்பதில் எஸ்ஐடிக்கு குழப்பம் நீடிக்கிறது. இதுதொடர்பாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் மத்திய தடவியல் கழகம் ஆகியவற்றிந் குழுக்கள் நடத்திய பல்வேறு சோதனைகளுக்குப் பிறகும் குழப்பம் நீடிப்பதாக தெரிகிறது.

இருப்பினும், இஷ்ரத் கொலை தொடர்பாக அமைக்கப்பட்ட எஸ்.ஐடி குழுவில் உள்ள மூன்று உறுப்பினர்களான ஆர்.ஆர்.வெர்மா, ஜா மற்றும் சதீஷ் வெர்மா ஆகிய மூவருக்கும் இஷ்ரத் கொலை செய்யப்பட்டதில் குழப்பம் நீடித்து வருகின்ற போதிலும், கொல்லப்பட்ட இஷ்ரத் உள்ளிட்ட நால்வருக்கும் தீவிரவாத தொடர்பு இருந்தது உண்மை என்று ஒரே கருத்தைத் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இஷ்ரத் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதால உறுப்பினர்களில் சிலரும், இல்லை இயற்கையான என்கவுண்டர்தான் என்று சிலரும் கருத்து கொண்டிருப்பதால் குழப்பம் நீடிக்கிறது.

முதலில் இஷ்ரத் என்கவுண்டர் தொடர்பாக குஜராத் தடயவியல் துறை ஒரு அறிக்கை சமர்ப்பித்தது. அதில் பல்வேறு கேள்விக்குறிகள் எழுப்பப்பட்டிருந்தன. இதையடுத்து மத்திய தடயவியல் துறை மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனையின் உதவியை எஸ்ஐடி கோரியது. இந்த அறிக்கைகள் வந்த பிறகும் கூட குழப்பம் தீரவில்லை.

2004ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி இஷ்ரத் ஜஹான், அவரது காதலர் பிரனீஷ் பிள்ளை என்கிற ஜாவேத் ஷேக், அமஜ்த் அலி ரானா என்கிற சலீம், ஜிஷான் ஜோஹர் ஆகியோர் அகமதாபாத்துக்கு அருகே போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது போலி என்கவுண்டர் என்று இஷ்ரத்தின் தாயார் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை தற்போது எஸ்ஐடி விசாரித்து வருகிறது. தனது விசாரணை இறுதி அறிக்கையை நவம்பர் 18ம் தேதி எஸ்ஐடி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment