Tuesday 27 September 2011

தேனியில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்டின் தமிழ் மாநில தலைவர்கள் மாநாடு




செப்டம்பர் 17, 18 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர்கள் மாநாடு தேனியில் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர்கள் மாநாடு (leaders conference) தேனியில் செப்டம்பர். 17, 18 ஆகிய தேதிகளில் சிறப்பாக நடை பெற்றது . மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் அவர்கள் தலைமை தாங்க, மாநில நிர்வாகிகள் மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் ,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், பகுதி நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் தமிழகத்தில் பல்வேறு திசைகளில் இருந்து கலந்து கொண்டனர். 


மாநாட்டின் துவக்க நிகழ்வாக முதல் நாள் காலை 10 மணியளவில் மர்ஹும் ஹிதாயத்துல்லாஹ் ஆசிரியர் அவர்களின் பெயர் சூட்டப்பட்ட மாநாட்டு திடலில் நீல நட்சத்திரம் பொறிக்கப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மூவர்ண கொடியை மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் அவர்கள் ஏற்றிவைத்து மாநாட்டை துவக்கிவைத்தார். மாநில பொதுச்செயலாளர் காலித் முஹம்மத் அவர்கள் மாநாட்டு நிகழ்வை தொகுத்து வழங்கினார்.

கொடியேற்று நிகழ்ச்சியை தொடர்ந்து காலை 10:15 மணிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் களப்பணிகள் குறித்த புகைப்பட கண்காட்சியை மாநில துணைத்தலைவரும் விடியல் வெள்ளி மாத இதழின் ஆசிரியருமான மு.முஹம்மத் இஸ்மாயில் அவர்கள் துவக்கி வைத்தார்.

 இதனைத் தொடர்ந்து காலை 11 மணிக்கு "தலைவர்கள் மாநாடு" (leaders conference) துவங்கியது. இம்மாநாட்டில் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் அவர்கள் தலைமை உரையாற்றினார் . அதனை தொடர்ந்து மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஏ.முஹம்மத் யூசுப், SDPI இன் மாநில தலைவர் K.K.S.M. தெஹ்லன் பாகவி, SDPI பொதுச் செயலார் நெல்லை முபாரக், ஆல் இந்திய இமாம்ஸ் கவுன்சில் (AIIC) மாநில தலைவர் சையது இப்ராகிம் உஸ்மானி, மாநில துணைத்தலைவரும் விடியல் வெள்ளி மாத இதழின் ஆசிரியருமான மு.முஹம்மத் இஸ்மாயில், சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட மனோதத்துவ நிபுணரும் பேராசிரியருமான Dr. அப்துல்லாஹ், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் E.M. அப்துல் ரஹ்மான், தேசிய துணைத்தலைவர் M. முஹமது அலி ஜின்னா ஆகியோர் சிறப்புரையாற்றினர். 

 இம்மாநாட்டில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

1) அரசு பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு பல்வேறு நலப்பணிகள் அறிவித்திருந்தாலும் இத்திட்டங்களின் பயன்களை அடித்தட்டு மக்களுக்கு கொண்டு செல்வதில் தேக்க நிலையே ஏற்பட்டுள்ளது. பல சமயங்களில் இது போன்ற திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி பயன்படுத்தப்படாமலேயே இருப்பதும் தெரியவருகிறது. மேலும் அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் மிக குறைவாகவே உள்ளது. பல்வேறு அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் குறிப்பாக முஸ்லிம்கள் எத்தனை சதவீதத்தினர் இருக்கிறார்கள் என்ற வெள்ளை அறிக்கையை அரசு தாக்கல் செய்ய வேண்டும். பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்ளை அனைத்து துறைகளிலும் சக்திப்படுத்தும் இலக்கினை நோக்கி செயல்படும் பாப்புலர் ஃப்ரண்ட், அரசு நலப்பணிகளை மக்களுக்கு கொண்டு செல்லும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்.

2) தியாகி இம்மானுவேல் அவர்களின் 54ஆவது நினைவு தினத்தில் பரமக்குடி மற்றும் மதுரையில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர் . இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கிறது. சூழ்நிலையை நீதியுடனும் பொறுப்புணர்ச்சியுடனும் கையாண்டிருந்தால் இத்தகைய துயர சம்பவம் நடைபெற்றதை தவிர்த்திருக்கலாம். தாழ்த்தப்பட்ட சமூகத்தின் நியாயமான கோரிக்கைகளை அங்கீகரித்து தேவையான பாதுகாப்பு முயற்சிகளைமேற்கொள்ள வேண்டிய காவல்துறை,ஒருவிதமான அராஜக போக்கை கடைப்பிடித்துள்ளது. தமிழக முதல்வர் இத்தகைய காவல்துறையின் அராஜக போக்கை தடுத்து நிறுத்தவில்லையென்றால் அமைதிப்பூங்காவான தமிழகம் மீண்டும் அமளிக்காடாக மாறும் அபாயம் உள்ளது என்பதை பாப்புலர் ஃப்ரண்ட் இத்தருணத்தில் குறிப்பிடுகிறது. நடந்த சம்பவத்தை முறையாக நீதி விசாரணைக்குட்படுத்தி தகுந்த நியாயம் வழங்குவது தான் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறுவதை தடுக்க முடியும் என்பதை பாப்புலர் ஃப்ரண்ட் தெரிவிக்கிறது.
 
3) மக்கள் மத்தியில் சமூக மற்றும் அரசியல் மாற்றத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும், இந்தியாவில் வாழக்கூடிய எல்லாதரப்பு மக்களுக்கும் சமமான நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், மேலும் ஒவ்வொரு இந்திய குடிமகனும் தனக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை போராடி பெற வேண்டும் என்ற அடிப்படையில் டெல்லியில் வருகின்ற நவம்பர் மாதம் 26 மற்றும் 27 ஆகிய இரு தினங்கள் “BUILD THE NATION ON JUSTICE” "தேசத்தை நீதியால் கட்டமைப்போம்" தேசிய அளவிலான "சமூக நீதி மாநாடு"    (SOCIAL JUSTICE CONFERENCE) ஓன்றை நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைமை முடிவுசெய்துள்ளது. டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற தேசிய செயற்குழு கூட்டத்தில் இம்முடிவு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இம்மாநாட்டை வெற்றிகரமாக நடத்தும் பொருட்டு தமிழகத்தில் பொதுக் கூட்டங்கள் மற்றும் தெருமுனை கூட்டங்கள், சுவரொட்டி பிரச்சாரங்கள், துண்டு பிரசுரங்கள் ஆகியவற்றின் வழியாக மாநாட்டினை விளம்பரப்படுத்த உள்ளோம். இதன் மூலம் மாநாட்டின் நோக்கம் மற்றும் முக்கியத்துவம் பற்றி பிரச்சாரம் செய்யப்படும். இம்மாநாட்டிற்கு தமிழகத்திலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என இப்பிரச்சாரத்தின் மூலம் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

4) குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி அமைதி, மதநல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி உண்ணாவிரதம் இருப்பது அரசியல் இலாபத்திற்காவும் மக்களை திசைதிருப்பும் செயலுக்காகவுமே அன்றி வேறில்லை. தொடர்ந்து பல அதிகாரிகள் மோடியை குஜராத் இனப்படுகொலை நடத்தப்பட காரணமானமானவர் என்று குற்றம் சாட்டியிருக்கும் நிலையிலும், பல வழக்குகள் இது சம்பந்தமாக நடந்துவரும் வேளையிலும் அமைதி, மதநல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி நடத்தும் உண்ணாவிரதம் மக்களை திசைதிருப்பும் முயற்சியே அன்றி வேறில்லை.மேலும் இதே காலகட்டத்தில் குஜராத் இனப்படுகொலை புகழ் மோடியின் நிர்வாகத்தை பல நாடுகளில் இராணுவ நடவடிக்கை மூலம் பல அப்பாவிகளை கொன்று குவித்த அமெரிக்கா புகழ்ந்துள்ளதும் பல்வேறு சத்தேகங்களை எழுப்புகிறது. இத்தகைய சூழ்நிலையில் தமிழக முதல்வர் மோடியின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து தன் பிரதிநிதியாக இரண்டுபேரை உண்ணாவிரதத்திற்கே குஜராத்திற்கு அனுப்புவது சிறுபான்மையினரின் மனதை புண்படுத்துவதாக இருக்கிறது.மோடி தேசிய மதச்சார்பன்மை மற்றும் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரான ஹிந்துத்வா கொள்கைக்கு ஆதரவு தெரிவிப்பவர். நாட்டின் மதச்சார்பன்மை கொள்கையை கருத்தில் கொண்டு மோடியின் விஷயத்தில் தமிழக அரசு தன் அணுகுமுறையில் மறுபரிசீலனை செய்யவேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக்கொள்கிறது.

 5) கடந்த தி.மு.க ஆட்சியில் அண்ணா பிறந்த நூற்றாண்டு தினத்தை ஒட்டி 7 வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்த 1405 ஆயுள் கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டார்கள். அதில் முஸ்லிம் கைதிகள் மட்டும் பாரபட்சமாக விடுதலை செய்யப்படாமல் மிகப் பெரும் அநீதி நடைபெற்றது. கடந்த கால ஆட்சியில் நடைபெற்ற பல விஷயங்களில் சீர்திருத்தங்களை கொண்டு வரும் தற்போதைய அ.இ.அ.தி.மு.க அரசு, சிறைவாசிகளின் விஷயத்தில் நடந்த மிகப்பெரும் அநீதியை சரிசெய்ய வழிவகை செய்யும் என சிறைவாசிகளின் குடும்பத்தினர் ஏக்கத்தோடு எதிர் பார்த்து இருந்தனர்.ஆனால் கடந்த செப்டம்பர் 15 அன்று தமிழக அரசு பொது மன்னிப்பில் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யாதது சிறைவாசிகளின் குடும்பங்கள், முஸ்லிம் சமூகம் ,மனித உரிமை ஆர்வலர்கள் ,நடுநிலையாளர்கள் ஆகியோரை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது .வரும் காலத்திலாவது தமிழக அரசு இதனை மறு பரிசீலனை செய்து சிறைவாசிகள் குடும்பத்திற்கு நீதி வழங்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டு கொள்கிறது.

6) நம் தேசத்திற்கு சுதந்திரம் வாங்கி தந்தவர்களின் தியாகங்களை நினைவு கூறும் வகையிலும், பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்க உறுதிபூண்டு செயல்படவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வருடா வருடம் ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின அணிவகுப்பு நடத்திவருகிறது. நம் முன்னோர்கள் சுதந்திரம் வாங்கும் போது நம் தேசத்தை பற்றி கண்ட கனவான சமூக நீதி மற்றும் சம நீதி, ஊழலில்லா ஆட்சி போன்ற இலட்சியங்கள் இன்று புதைகுழியில் தள்ளப்பட்டுள்ளது. நாட்டை அடகுவைக்கும் ஒப்பந்தங்கள் மற்றும் வெளியுறவு கொள்கைகள் நம் தேசத்தின் வளர்ச்சிக்கே பெரும் சவால்களாக உள்ளது. இத்தகைய சூழலை மாற்றி அமைத்து நம் தேசத்தை, நம் முன்னோர்களின் கனவின் அடிப்படையில் சமநீதி, மதச்சார்பின்மை போன்ற ஜனநாயகத்தின் கோட்பாடுகளுக்கு உட்பட்டு, நாட்டை சக்தி படுத்த வேண்டி கொண்டாடப்படும் ஒரு நிகழ்ச்சிக்கு இவ்வருடம் அரசு அனுமதியளிக்காததை உரிமை மறுப்பாகவே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கருதுகிறது . கடந்த கால தி.மு.க ஆட்சியில் 2008 ஆம் வருடம் இந்நிகழ்சியினை கொண்டாட நீதி மன்றம் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு நீதிமன்ற அனுமதியுடன் நடத்தினோம்.2009, 2010 ஆகிய ஆண்டுகளில் கடந்த தி.மு.க அரசில் காவல் துறை அனுமதியுடன் எந்த விதமான சட்ட ஒழுங்கு பிரச்சனைகளும் ஏற்படாத வகையில் சுதந்திர தின அணிவகுப்பை நடத்தினோம். சிறுபான்மை சமூகம் நடத்தி வரும் ஒரு நல்ல நிகழ்ச்சிக்கு காவல்துறை மற்றும் உளவு துறை தேவையில்லாத அனுமானங்களை ஏற்படுத்தி பலவிதமான நெருக்கடிகளை கொடுப்பது துரதிஷ்டவசமானது. ஒரு சமூகத்தின் நியாயமான உரிமைகளை அதிகார துஷ்பிரயோகத்தால் தடுக்கும் தமிழக காவல்துறையின் அராஜக போக்கை வன்மையாக கண்டிக்கிறது இம்மாநாடு. உண்மையான ஜனநாயக கொள்கையை சக்திபடுத்த, நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாடநீதிமன்றத்திற்கு செல்லும் நிலைக்கு சிறுபான்மையினர் தள்ளப்படுவதே இங்கு சமூக நீதி மற்றும் சம நீதி, மதச்சார்பின்மை புதைகுழியில் தள்ளப்பட்டுள்ளது என்பதை பறைசாற்றுகிறது. சுதத்திரம் நமது பிறப்புரிமை, அதை யார் தடுத்தாலும் அனுமதியோம் என்ற கொள்கையில் உறுதியாக நிற்கும் பாப்புலர் ஃப்ரண்ட் தன் உரிமைக்காக நீதிமன்றத்திற்கும் ,மக்கள் மன்றத்திற்கும் இதனை எடுத்துச்செல்லும் என இம்மாநாடு தீர்மானிக்கின்றது.
 
7)அக்டோபர் மாதம் தமிழகத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் அரசியல் பரதிநிதியாக வளர்ந்து வரும் எஸ்.டி.பி.ஐ எடுக்கும் முடிவுகளுக்கு பாப்புலர் ஃ ப்ரண்ட் ஆப் இந்தியா தனது முழு ஆதரவை தெரிவித்து கொள்கிறது. எஸ்.டி.பி.ஐ. வேட்பாளர்கள் வெற்றி பெற பாப்புலர் ஃபரண்டின் தொண்டர்கள் முழுமையாக களப்பணி ஆற்றுவார்கள் என்பதை இம்மாநாடு தெரிவித்து கொள்கிறது. எஸ்.டி.பி.ஐ. வேட்பாளருக்கு ஆதரவு அளிக்குமாறு சமுதாய மக்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா கேட்டுக் கொள்கிறது . காங்கிரஸ் அரசில் மாத்திரம் அல்ல கடந்த பி.ஜே.பி ஆட்சியிலும் இதே நிலையே நீடித்தது. தற்போது பி.ஜே.பி. ஆட்சி செய்கின்ற கர்நாடகா,குஜராத் போன்ற மாநிலங்களில் இதே நிலையே நீடிக்கிறது. தங்களது ஊழலை மறைக்கவும், உள்கட்சி பூசலை மறைக்கவும் மக்களிடம் இழந்து போன ஆதரவை மீட்கவும் ஊழலுக்கு எதிராக ரத யாத்திரை நடத்த விருப்பதாக பி.ஜே.பி. அறிவித்து இருப்பது கேலிக்குரியது . ஏற்கனவே அத்வானியின் ரத யாத்திரை வன்முறை யாத்திரையாக மாறி போனதை மத்திய அரசும் ,மாநில அரசும் ,நாட்டு மக்களும் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே மக்களை ஏமாற்றும் இந்த ரத யாத்திரையை பி.ஜே.பி. கைவிடக் கோரி நாட்டு மக்கள் அரசிற்கு நிர்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது . 

இப்படிக்கு 

அ.காலித் முஹம்மது 

மாநில பொதுச் செயலார்.

நன்றி : http://popularfronttn.org

No comments:

Post a Comment