Tuesday 9 August 2011

சமச்சீர் கல்வியை அமல்படுத்த உச்சநீதிமன்றம் ஆணை


இந்திய உச்சநீதிமன்றம்
தமிழ்நாட்டில் உடனடியாக சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.                       தமிழக அரசின் மேல்முறையீட்டை இந்திய 
உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
நீதிபதிகள் ஜே.எம். பாஞ்சால், பி.எஸ். செளஹான் மற்றும் தீபக் வர்மா ஆகியோர் கொண்ட பெஞ்ச் செவ்வாய்க்கிழமை இதுதொடர்பான தீர்ப்பை வழங்கியது.
   
தமிழக அரசு இன்னும் 10 நாட்களுக்குள் சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டார்கள்.

25 காரணங்கள்

மூன்று நீதிபதிகளின் சார்பில், தீர்ப்பை வாசித்த நீதிபதி பி.எஸ். செளஹான், உயர்நீதிமன்ற உத்தரவு சரியானதுதான் என்பதை விளக்கி, 25 காரணங்களை தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து, மேல்முறையீட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்த நீதிமன்றம், இன்னும் 10 நாட்களுக்குள் சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
"மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிப்பது அடிப்படைக் கல்வி. இன்று அவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது. அதில் தலையிடுவது தவறு"
இந்திய உச்சநீதிமன்றம்

நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள 25 காரணங்களில், எந்தச் சட்டத்தையும், அதன் விளைவுகளைக் கருத்தில் கொள்ளாமல், வெறும் ஆட்சி மாற்றம் காரணமாக மாற்றக் கூடாது என்றும்,அரசியல் கட்சிகள் விருப்பு, வெறுப்புடன் செயல்படக்கூடாது என்றும் அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிப்பது அடிப்படைக் கல்வி. இன்று அவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது. அதில் தலையிடுவது தவறு என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேல்முறையீடுகள்

முந்தை திமுக அரசால் கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டம் தரமற்றதாக இருப்பதால், அதை இந்த ஆண்டு அமல்படுத்துவதை ஒத்திவைக்கும் வகையில், புதிதாகப் பொறுப்பேற்ற அதிமுக அரசு சட்டத் திருத்தம் கொண்டுவந்தது.

அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் அடிப்படையில், சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்றும், தமிழக அரசின் சட்டத் திருத்தம் செல்லாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக, தனியார் பள்ளிகளும் முறையீடு செய்தன. அதற்கு எதிராக, மாணவர் மற்றும் பெற்றோர் சார்பில் பல்வேறு கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

அரசியல் போட்டி

 சமச்சீர் கல்வித் திட்டம் அவசர கோலத்தில் கொண்டுவரப்பட்டிருப்பதால், அதில் பல குளறுபடிகள் உள்ளதாகவும், பாடங்களில் தரமில்லை என்றும், அரசியல் ஆதாயம் தேடுவதற்காகத்தான் அந்தச் சட்டமே கொண்டுவரப்பட்டதாகவும் அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த அரசு சமச்சீர் கல்விக்கு எதிரானதல்ல என்றும், அதில் உள்ள தவறுகளைக் களைந்து அமல்படுத்தத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில், சமச்சீர் கல்வித் திட்டத்தில், 9 கோடி பாடப்புத்தகங்கள் 200 கோடி ரூபாய் செலவில் அச்சிடப்பட்டு, அரசுக் கிடங்குகளில் கிடப்பதாகவும், முந்தைய அரசால் கொண்டுவரப்படது என்ற அரசியல் காரணத்துக்காகவே அரசு அந்தத் திட்டத்தை எதிர்ப்பதாகவும் மாணவர் மற்றும் பெற்றோர் தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழ்நாட்டில், மாநிலக் கல்வித் திட்டம், மெட்ரிகுலேஷன் உள்பட நான்கு வகையான கல்வித் திட்டங்கள் உள்ளன. அவரை அனைத்தையும் ஒரே பாடத்திட்டமாக்கி, அதன் தரத்தை உயர்த்தி, சமச்சீர் கல்வி என்ற பெயரில் புதிய திட்டம் கொண்டுவரப்பட்டதாக, முந்தைய அரசு அறிவித்திருந்தது.

ஜெயலலிதா அறிவி்ப்பு

ஜெயலலிதா
தீர்ப்பை ஏற்கிறோம்

உச்சநீதிமன்றத் தீர்ப்பை அடுத்து, இந்தக் கல்வி ஆண்டிலேயே சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

கருணாநிதி வரவேற்பு

சமச்சீர் கல்வியை அமல்படுத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதற்கு, திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி வரவேற்புத் தெரிவித்துள்ளார். இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என்றும், பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் கிடைத்த வெற்றி என்றும் கருணாநிதி கருத்துத் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு, இடதுசாரிக் கட்சிகள் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புக்களும் வரவேற்புத் தெரிவித்துள்ளன. பல இடங்களில், உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்று பட்டாசு வெடித்துக் கொண்டாடி மகிழ்ந்ததாக செய்திகள் வந்துள்ளன.

No comments:

Post a Comment