Thursday 30 June 2011

சமச்சீர் கல்விக் குழுவின் ஆய்வு முடிந்தது-ஜூலை 5ல் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்!

சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சமச்சீர் கல்வித் திட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் ஆய்வு முடிவடைந்துள்ளது. இதையடுத்து ஜூலை 5ம் தேதி இக்குழு தனது அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறது.



1 மற்றும் 6 ம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டும் சமச்சீர் கல்வித் திட்டம் தொடர வேண்டும். பிற வகுப்புகளுக்கு இதை அமல்படுத்துவது குறித்து குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி குழு அமைக்கப்பட்டது.

தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி தலைமையிலான இக்குழுவில், மத்திய இடைநிலைக் கல்வி வாரிய முன்னாள் இயக்குனர் (கல்வி) ஜி.பாலசுப்பிரமணியன், சென்னை லேடி ஆண்டாள் மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் தாம்பரத்தில் உள்ள சென்னை சேவா சதன் ஆலோசகர் விஜயலட்சுமி சீனிவாசன், சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி.பள்ளிகள் குழுமம் நிறுவனர் மற்றும் செயலாளர் சி.ஜெயதேவ், சென்னை பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளிகள் முதல்வர் மற்றும் இயக்குனர் டாக்டர் ஒய்.ஜி.பார்த்தசாரதி, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன பிரதிநிதிகளான புதுடெல்லி அறிவியல் மற்றும் கணிதவியல் கல்வித்துறை பேராசிரியர் பி.கே.திரிபாதி, புதுடெல்லி சமூக அறிவியல் துறை பேராசிரியர் அனில் சேத்தி, பள்ளிக் கல்வித் துறை செயலாளர் டி.சபீதா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் வசுந்தராதேவி குழுவின் உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்தக் குழு 3 முறை கூடி ஆலோசனை நடத்தியிருந்தது. இந்த நிலையில் நேற்று இறுதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து ஜூலை 5ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தங்களது ஆய்வு முடிவுகளை குழு சமர்ப்பிக்கும் என்று குழு உறுப்பினரான சபீதா தெரிவித்தார்.

ஜூலை 6ம் தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது நினைவிருக்கலாம். அறிக்கை தாக்கல் செய்த பின்னர் அதை ஒரு வாரத்திற்குள் தினசரி விசாரணை நடத்தி தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று உயர்நீதி்மன்றத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment