Wednesday 18 May 2011

மெரீனா கடற்கரையில் மாயமான 5 வயது சிறுமி கதி என்ன?; ஒருவாரம் ஆகியும் கிடைக்காததால் பெற்றோர் கண்ணீர்!!

ராயப்பேட்டை அங்கமுத்து தெருவைச் சேர்ந்தவர் சையது நூர் அகமது. மருந்துக்கடை அதிபர். இவரது மனைவி ஹசீனா. இவர்களது 5 வயது இரட்டை குழந்தைகள் தம்மன்னா, ரிகாத்.

கடந்த 11-ந்தேதி குழந்தைகளுடன் பெற்றோர் மெரீனா கடற்கரைக்கு சென்றனர். அங்கு உழைப்பாளர் சிலை அருகே சிறுமியும், சிறுவனும் விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது சிறுமி தம்மன்னா மாயமாகி விட்டாள்.

பெற்றோர் பதறியடித்தவாறு கடற்கரை முழுவதும் தேடினார்கள். அதன் பிறகு அண்ணா சதுக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

சிறுமி மாயமாகி ஒரு வாரம் ஆகியும் கதி என்ன என்று தெரியவில்லை. சிறுமியை யாராவது கடத்திச்சென்றார்களா? என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

சிறுமி தம்மன்னா எல்.கே.ஜி. படித்தாள். அவளுக்கு தமிழ் தெரியாது. ஆங்கிலம், இந்தி மட்டுமே தெரியும். குழந்தையை காணாமல் பெற்றோர் கண்ணீர் விட்டு கதறி அழுதபடி உள்ளனர்.

அவர்கள் கண்ணீர் மல்க நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 11-ந்தேதி சிறுமி தம்மன்னாவும், சிறுவன் ரிகாத்தும் விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது இருவரும் பஞ்சு மிட்டாய் வேண்டும் என்று கேட்டதால் காசு கொடுத்து இருவரையும் அனுப்பி வைத்தோம்.

சற்று தொலைவில் இருந்த பஞ்சு மிட்டாய் வியாபாரியிடம் இருவரும் சென்று வாங்கினார்கள். அப்போது காசு குறைவாக இருந்ததால் தம்மன்னா அங்கேயே நின்று கொண்டு ரிகாத்தை காசு வாங்கி வருமாறு அனுப்பி வைத்தாள்.

ரிகாத் திரும்ப சென்றபோது தம்மன்னாவை காணவில்லை என்று சொன்னான். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தோம். அந்தப்பகுதி முழுவதும் தேடினோம். பஞ்சு மிட்டாய் வியாபாரியிடம் கேட்டோம். அவர் குழந்தையை கவனிக்கவில்லை என்று கூறி விட்டார்.

போலீசார் என் மகளை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம். பொதுமக்களும் தகவல் தெரிந்தால் 8056104888 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு பெற்றோர் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

No comments:

Post a Comment