Wednesday 3 August 2011

ஆகஸ்ட் 10 ம் தேதி : எஸ்எஸ்எல்சி சிறப்பு துணைத்தேர்வு முடிவு

சென்னை : எஸ்எஸ்எல்சி மெட்ரிக், ஓஎஸ்எல்சி ஆங்கிலோ-இந்தியன் சிறப்பு துணைத்தேர்வு முடிவுகள் 10ஆம் தேதி வெளியிடப்படுகின்றன.

அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;

எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக்குலேஷன், ஓ.எஸ்.எல்.சி. ஆங்கிலோ-இந்தியன் சிறப்பு துணைத்தேர்வு முடிவுகள் வருகிற 10-ந் தேதி (புதன்கிழமை) காலை வெளியிடப்படுகின்றன. தேர்வு முடிவுகளை கீழ்க்கண்ட இணையதள முகவரிகளில் மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்.

www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in
www.pallikalvi.in

மதிப்பெண் சான்றிதழ்களை தேர்வு எழுதிய மையங்களில் 19 மற்றும் 20ஆம் தேதி ஆகிய 2 நாட்கள் நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம். மறுகூட்டலுக்கான விண்ணப்பங்கள் 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை வழங்கப்படும். விண்ணப்ப படிவங்களை அனைத்து மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் அரசு தேர்வுத்துறை துணை மண்டல அலுவலகங்களிலும் (சென்னை நீங்கலாக) பெற்றுக்கொள்ளலாம்.

சென்னையில் முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்திலும், சென்னை தெற்கு, மத்திய சென்னை, கிழக்கு சென்னை, வடசென்னை ஆகிய மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் விண்ணப்பங்கள் கிடைக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களையும் இந்த அலுவலகங்களிலேயே சமர்ப்பிக்க வேண்டும்.

மறுகூட்டல் விண்ணப்பம் பெறுதல், சமர்ப்பித்தல் தொடர்பாக சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசு தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தையோ அல்லது அந்த வளாகத்தில் உள்ள தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தையோ அணுக வேண்டாம் என்று மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மறுகூட்டலுக்கு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 13ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கடைசி தேதிக்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

இவ்வாறு வசுந்தராதேவி கூறி உள்ளார்.

No comments:

Post a Comment